Friday 9 February, 2018

முள்ளிக்கரும்பூர்

திருச்சி வயலூர் அருகே உள்ள முள்ளிக்கரும்பூரில் ஒரு சிவன் கோவில் இருந்தது என வரலாறு .காம் ல் படித்திருக்கிறேன் . இன்று குமார வயலூர் போன போது அங்கு போனேன் . கோவில் இருந்த இடம் தெரியவில்லை . விக்ரகங்களை பாலாலயம் செய்து ஒரு கொட்டகையில் வைத்திருந்தார்கள் . புதிய கோவிலுக்கு அடித்தளம் மட்டும் போடப்பட்டுள்ளது . பிரிக்கப்பட்ட கோவில் கட்டிட கற்களும் , தூண்களும் , ஆங்காங்கே குவிக்கப் பட்டு இருக்கிறது . திருப்பணி முடிந்து விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டிக்கொண்டேன் . அருகே உள்ள கிராம தேவதைகள் கோவிலில் ( வெள்ளம் காத்த அம்மன் ) வரிசையாக ஓரடி உயர சிலைகள் வைக்கப்பட்டு இருக்கிறது . அதில் சில நடுகல் போல இருக்கிறது .

Image may contain: tree and outdoor

Image may contain: plant, tree, sky, outdoor and nature

Image may contain: sky, tree, plant, outdoor and nature

Image may contain: outdoor

Image may contain: plant, tree, sky, grass, outdoor and nature

கருப்பூர்


திருச்சி கரூர் சாலையில் ஜீயபுரம் உள்ளது இங்கிருந்து உள்ளே 3 கி.மீ தொலைவில் சின்ன கருப்பூர், பெரியகருப்பூர், எனும் சிற்றூர்கள் அடுத்தடுத்து இருக்கிறது. இதில் சின்ன கருப்பூர் வளைவில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. ”பார்சுவநாயகி சமேத ஸ்ரீ அக்னீச்வரர்” என பெயர்ப் பலகை காட்டுகிறது. 
பெரிய அகலமான சுற்றுச் சுவர்கொண்ட விசா ல மான கோவில். எதிரே ஒரு குளம்.கோபுரம் அற்ற அடித்தளம் மட்டும் இருக்கிறது. உள் நுழைந்ததும் இடப்புறம் அம்மன் சன்னதி. அருள்மிகு பார்சுவநாயகி அம்மன். அதை தாண்டினால் சுவரில் அதிகாரநந்தி புடைப்புச் சிற்பமாக இருக்கிறது. பலிபீடமும், நந்தியும், உள்ள முன் மண்டபம் இடிந்து தூண்கள் மட்டும் இருக்கிறது. அதனை கொண்டு ஓடு வேயப்பட்டுள்ளது.பக்கத்தில் ஸ்தல விருட்சம் வன்னிமரம்.அதைச் சுற்றி ஒரு மேடை அதில் அய்யனார உள்ளிட்ட சில சிலைகள் சற்று கூடுதல் உயரமான அம்மன் சிலை ஒன்றும் இருக்கிறது.
அர்த்தமண்டபம் தாண்டி உள்ளே சென்றால் அக்னீஸ்வரரை அருகே நின்று தரிசிக்க முடிகிறது. கோவில் வரலாறு தெரியவில்லை. அந்த இடத்தில் நிற்பது ஒரு மனநிம்மதியை கொடுத்தது. சில கோயில்களில் மட்டும் இதை சட்டென உணர முடியும். அது கோவில் காரணமா அல்லது எனது மனநிலை காரணமா தெரியவில்லை.
கோவிலை சுற்றி வந்தால் நவக்கிரகங்கள் தனி மண்டபத்தில். இன்று சனி பெயற்சி என்பதால் அங்கு ஏதோ ஹோமத்திற்கு ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. அதையும் தாண்டி வந்தால் துர்க்கை, சண்டிகேஸ்வரர் தாண்டி ஒரு விநாயகர் சன்னதி.
எம்ஜிஆர் பட டைட்டில் போல ”நினைத்ததை முடிப்பவர்” என்கிற டைட்டிலுடன் இருக்கிறார் விநாயகர்ப்பெருமான். .வன்னிமரத்தை 21 முறை சுற்றினால் வேண்டிய வரம் கிடைக்கும் என ஒரு போர்டு இருந்தது.இப்படியெல்லாம் ஏதாவது சொல்லித்தான் மக்களை ஆகர்ஷிக்க வேண்டியுள்ளது.
கொஞ்ச நேரம் கோயில் வாசலில் உட்கார்ந்திருந்துவிட்டு வந்தோம். மனம் சஞ்சலமற்று இருந்தது. அந்தப்பக்கம் நீங்கள் போனால் ஜீயபுரடத்திலிருந்து உள்ளே இந்த அக்னீஸ்வரர் கோவிலுக்குப் போய் வாருங்கள் உங்களுக்கும் அந்த அனுபவம் கிட்டலாம்.
Image may contain: outdoor
Image may contain: tree, grass, sky, house and outdoor
Image may contain: outdoor and indoor
Image may contain: outdoor

திருப்பெரும்துறை

திருவாசகம் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டதை திருப்பெருந்துறை ( ஆவுடையார் கோவில் ) யில் பாதுகாத்து வருகிறார்கள் . அது ஒரு தனி சந்நிதியில் இருக்கிறது . நாங்கள் போனபோது யாரோ ஒரு சிவனடியார்க்கு குருக்கள் கதவை திறந்து எடுத்து காட்டினார்கள் . நாங்களும் பார்த்தோம் . அந்த சிவனடியார் கண்ணீர் மல்க விழுந்து கும்பிட்டார் . எங்களுக்கும் காட்டினார் " தொடாமல் பாருங்க " என்று சொல்லி . எந்த காலத்தில் யார் எழுதியது எனத் தெரியவில்லை . அந்த சிவனடியாரிடம் கேட்டேன் . இது மாணிக்க வாசகர் எழுதியதா ? என்று . அப்பா இது சாட்சாத் பரமேஸ்வரனே மாணிக்க வாசகர் சொல்ல தன் கையால் எழுதியது என்றார் . நம்பிக்கைகளுக்கு பலம் ஜாஸ்தி . ஆய்வுகள் எதுவும் இங்கு முக்கியமில்லை . எல்லாமே சொப்பனம் என்னும் வாழ்வில் . அந்த கணம் , அந்த இடம் , அந்த குரல் , அந்த உணர்வு , அந்த சுவடி , இவைகளை புதிதாக உணர்ந்தேன் . இதற்குமுன் ஒருமுறை இங்கு வந்தபோது இந்த சுவடியை ஏன் பார்க்க முடியவில்லை என்பதற்கும் , இன்று அந்த சிவனடியார் வழியாக ஏன் பார்க்க கிடைத்தது என்பதற்கும் எந்த பதிலும் இதுவரை இல்லை . திருவாசகக் கோவில் எனும் இந்த சந்நிதியில்தான் அந்த ஓலைச்சுவடி இருக்கிறது .

தண்டலை

சும்ப, நிசும்பர்களின் படைத்தலைவர்களான சண்ட, முண்டர்களை அழித்தமையால் காளி சாமுண்டிஆனதாக தேவிபாகவதம் கூறுகிறது. காளியின் மற்றொரு அம்சமே சாமுண்டி என கருதப்பட்டாலும் , இயமனின் மனைவியாக சாமுண்டியை ஆகமங்கள் சுட்டுவதாகவும், ஆய்வாளர்கள் இந்த முரண்பாட்டை சுட்டுகிறார்கள்.
“ தாய் தெய்வ வழிபாட்டில் தொடங்கிய பெண் தெய்வ வழிபாட்டுச் சிந்தனைகளின் முதற்படி கொற்றவை. சங்ககாலத்தின் பிற்பகுதியில் கொற்றவை துர்க்கையாகி சிவபெருமானின்றும் நீங்கத் தொடங்க , புது வரவான உமை அவ்விடம் பெறுகிறார். பல்லவர் காலத்தில் போற்றப்பட்டு பின் அவரை கோட்டத்தெய்வமாக்கி மண்டபத்துக்கு அனுப்புகிறார்கள்” என “பெண் தெய்வவழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்” எனும் ஆய்வு கட்டுரை மூலம் ஆய்வாளர் மு.நளினி அவர்கள் முடிவுக்கு வருகிறார்.
அதே கட்டுரையில் ”சிலப்பதிகாரக் காலத்தில் அன்னையர் எழுவருள் ஒருவராக அறிமுகமாகும் காளி, தேவார காலத்தில் தனித் தெய்வமாகிறார். அவர் இடத்திற்கு வரும் புதிய நுழைவான சாமுண்டி , காளியின் தன்மைகளைப் பெற்றவராகவே அமைந்து, அன்னையர் எழுவர் தொகுதியில் சிறப்பிடம் பெற்று தனித்தமயும் வாய்ப்பைப் பெறுகிறாள் சாமுண்டி” என குறிப்பிடப்படுகிறது.
ஆனால், பிற்காலத்தில் தமிழகத்தின் பலபகுதிகளில் சாமுண்டீஸ்வரிக்கென, தனி கோவில்கள் அமைந்திருப்பதும் பெரும்பாலும் அவை கிராமங்களில் குடிகொண்டுள்ளது எவ்வாறு என யோசிக்க வைக்கிறது. கர்நாடக மாநிலத்தில் சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரியின் தொடராக அங்கிருந்து பெயர்ந்தவர்களின் வழிபாடாக இது இருக்க வாய்ப்பிருக்கிறது. இப்போதும் தமிழகத்தில் எழுவருள் ஒருவராகவும், பல இடங்களில் தனித்த கோவிலாகவும் சாமுண்டி இருப்பது இதனால் தான் என நினைக்கத் தோன்றுகிறது.
”திருப்பயற்றூர்” பதிகத்தில் அப்பர் சுவாமிகள் இப்படி பாடுகிறார். எழுத்துப் பூர்வமாக சாமுண்டி எனும் பதிவு தமிழில் முதலில் இங்குதான் கிடைக்கிறது.
பார்த்தனுக் கருளும் வைத்தார்
பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்
சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார்
கோளரா மதிய நல்ல
தீர்த்தமுஞ் சடையில் வைத்தார்
திருப்பயற் றூர னாரே.
சமீபத்தில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தண்டலை கிராமத்துக்குச் சென்றிருந்தேன்,
தண்டலை கள்ளக்குறிச்சியிலிருந்து எட்டு கிமீ தொலைவில் உள்ள கிராமம். இக்கிராமத்தின் பெரிய ஏரிக்கரையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் சாமுண்டி வழிபாடு சப்த கன்னியர்கள் தொடர்ச்சியாக வந்தாலும் , தண்டலை கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி மைசூர் சாமுண்டி மலையில் உள்ள தெய்வத்தின் பிரதியாக இருப்பதாக இவ்வூர் பெரியவர்கள் கூறுகிறார்கள்.
கர்நாடகத்திலிருந்து பெயர்ந்த மக்கள் தங்கள் தெய்வமான சாமுண்டியையும் தாங்கள் குடியேறும் இடங்களில் எல்லாம் கொண்டு நிறுவி வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. அழகான இயற்கைச் சூழலில் அமைந்த இந்த கோவிலின் உள்ளே இதர கிராம தெய்வங்களும் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்கள் குழந்தை பிறந்த உடன் சிறு தொட்டிலை அக்கோவில் மரக்கிளைகளில் கட்டும் வழக்கம் தமிழகத்தின் பலபகுதிகளில் உண்டு. ஆனால் தண்டலை சாமுண்டீஸ்வரி கோவிலிலோ மிகப் பெரிய அளவில், உண்மையில் ஒரு குழந்தையை விட்டு தாலாட்டும் அளவிற்கான தொட்டிலை பிரார்த்தனையை நிறைவேற்றிய சாமுண்டீஸ்வரிக்கு கோவிலில் பக்தர்கள் செலுத்துகிறார்கள்.
தற்போது இக்கோவிலை விரிவு படுத்தி கோபுரம் , முன்பண்டபம் என கட்டுவதற்கான பணிகள் அக்கிராமப் பெரியோர்களால் முன்னெடுக்கப் பட்டுள்ளது.அருமையான இயற்கைச் சூழலில் இக்கோவில் அமைந்துள்ளது.

Image may contain: people standing and outdoor
Image may contain: one or more people, tree and outdoor
Image may contain: outdoor
Image may contain: outdoor
Image may contain: 3 people, outdoor

அரடாப்பட்டு அனவரத தாண்டேஸ்வரர்

”ஆமேபொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத் தனவரத தாண்டவம்
ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம்
ஆமேசங் காரத் தருந்தாண் டவங்களே.”
என்பது திருமூலரின் திருமந்திரம்.
உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தும் மகேசன் திருநடனம் மூலம் உயிர் வாழ்கின்றன . இறைவன் திருநடனம் திருக்கைலாயத்தில் மட்டுமே நடைபெறும்.
பூலோக கைலாயம் எனப்படும் அரடாப்பட்டில் சிவபெருமான் இடைவெளியில்லா திருநடனம் ஆடிக்கொண்டிருக்கிறார். அருள்மிகு நலமருளும் நாயகி உடனுறை ஸ்ரீ அனவரத தாண்டேஸ்வரர் திருக்கோவில் திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழங்காலச் சிவன் கோவில்.
அனவரத தாண்டவம் என்பது எண்வகை சிவதாண்டவங்களுள் ஒன்று.
பதினெட்டு பூதகணங்கள் பூஜித்த தலம்.ஜடாமுடி சித்தர் வழிபாடு செய்த தலம்.பசு பூஜை செய்த திருத்தலம். நாகங்கள் இறைவனை பூஜித்த திருத்தலம் எனும் பல பெருமைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது இத்திருக்கோவில்.
சோழர்களின் கலைப்பாணியில் கட்டப்பட்ட திருக்கோவில் என்றாலும் யாருடைய ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது என்கிற வரலாறு இல்லை. விசாலமான பரப்பில் உயரிய , அழகிய , கருங்கல் கொண்டு திலமைக்கப்பட்டுள்ளது.
மூன்று நிலை கொண்ட சுதைசிற்பங்கள் அற்ற ராஜகோபுரம் ஓங்கி நிற்கிறது. ராஜகோபுரத்தின் உள்புறம் இருபக்கமும் சிவச்சந்திரனும், சிவசூரியனும் , பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது வேறு எந்த சிவன் கோவிலிலும் காணமுடியாதது
நவக்கிரங்களுக்கு தனிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் வில்வமரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இத்தலம் இருந்துள்ளது. கோவில் உட்புற மதிலை ஒட்டி தஞ்சை பெருங்கோவில் போல திண்ணை போன்ற அமைப்பு காணப்படுகிறது. அதில் ஓரிடத்தில் சதுரமான உள்ளே இறங்குவது போன்ற அமைப்புடைய பகுதி ஒரு அட்டையை போட்டு மூடப்பட்டுள்ளது. அதில் சுரங்கப்பாதை இருப்பதாக அங்கிருந்த பெரியவர் ஒருவர் தெரிவித்தார்.
அதன் நாலாபுறங்களிலும் சுற்றாக நாகநாதர், காலபைரவர், ஸ்ரீ ஞானக்கூத்தப்பெருமான், சிவகாமி, பஞ்சலிங்கங்கள், ஸ்ரீ மகாதேவர் , பெரியநாயகி, ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள், ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். ஈஸ்வரன் சன்னிதிக்கு தென்புறம் மகாகணபதிக்கு சன்னிதியும், வடபுறம் வள்ளி சுரமண்ய தெய்வயானைக்கு தனி சன்னிதியும் சற்று உயரமான தளத்தில் படியேறி போகவேண்டிவாறு இருக்கிறது. விநாயகருக்கு மோஷிகவாகனமும், சுப்ரமணியர்க்கு மயில் வாகனமும் , உயரமான பீடத்தில் எதிரே வீற்றிருக்கிறது.மகாகணபதி சன்னிதியில் உள்ள பதினெட்டுத் தூண்களிலும் அழகிய புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. அச்சன்னிதி மண்டபத்திற்கு முன்பு தாழ்வாரம் போன்ற பகுதியில் ஸ்தல விருட்சம் வன்னிமரமும் அதனைச் சுற்றி வட்டவடிவிலான மேடையும் அழகுற விளங்குகிறது. வன்னிமரத்தின் அடியில் நாகர் சிற்பங்களும் உள்ளது.
ஈஸ்வரன் சன்னிதிக்கு இருபுறமும் ஊர்த்தவகணபதியும், ஆறுமுகசாமியும் காட்சி அளிக்கின்றனர். மூலவர் அனவரத தாண்டேஸ்வரரும், அம்பிகை நலம்ருளும் நாயகியும், பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் இத்திருக்கோவிலில் குடமுழுக்கு நடைபெற்று சிறப்புடன் பூஜைகள் நடைபெறுகிறது. பிரதோஷ வழிபாட்டில் இப்பகுதி பக்தர்கள் பெருமளவில் கலந்துகொள்கிறார்கள்.

Friday 25 November, 2016

ஆத்தங்குடி பெரிய வீடு

ஆத்தங்குடி பெரிய வீடு . இப்படித்தான் அழைக்கிறார்கள் அந்த வீட்டை.சினிமாவில் பார்த்திருப்பீர்கள். சிவகங்கை மாவட்டம் , காரைக்குடிக்கு அருகே இருக்கிறது இந்த ஊர்.நாங்கள் திருக்கோஷ்ட்டியூர் போய் அங்கிருந்து பட்டமங்கலம், பிளையார்பட்டி, தரிசனம் முடித்து திருமெய்யம் போகவேண்டும் என திட்டமிட்டிருந்தோம். கோவில்கள் பெரும்பாலும் 12.00 க்கு நடை சாத்தி மீண்டும் 4.00 க்குத்தான் திறப்பார்கள்.பெரும்பாலும் அந்த நேரம் வேஸ்டாகிவிடும்.ஆனால் பிள்ளையார் பட்டியில் 1.00 வரை நடை திறந்துள்ளது. மதிய உணவிற்குப் பிறகு கிடைத்த நேரத்தை வீணடிக்காமல் என்ன செய்யலாம் என விசாரித்தபோது தான் " ஆத்தங்குடி பெரியவீடு" " கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனை " இரண்டையும் பார்த்துவிடலாம் என முடிவு செய்தோம். ஆத்தங்குடி செல்லும் வழியெல்லாம் வெறும் பொட்டல்காடு.இந்த பொட்டலுக்குள்ளா அப்படி ஒரு பங்களா கட்டியுள்ளார்கள் என ஆச்சர்யமாக இருந்தது.ஊர் நெருங்கும் முன் வழியில் கலர் டெயில்ஸ் கடைகள் ஆங்காங்கு இரு புறமும் இருந்தது.பெரியவீடு சாலையின் மீதே பிரம்மாண்டமாய் இருந்தது. உள்ளே நுழைந்ததுமே என்னை கொள்ளை கொண்டது பிரம்மாண்டமான திண்ணைதான்.நம் வீட்டில் எல்லாம் அதிலேயே சீமந்தம்,காதுகுத்தல்,என சிறு விசேஷங்களையே முடித்துவிடுவோம், அவ்வளவு பெரிய திண்ணை.சுவர்களில் இத்தாலியண்டெயில்ஸ், நிலைக்கதவிலிருந்து சன்னல் , விதானகட்டை, வரை எல்லாம் பர்மா தேக்கு.அருகால் அழகை பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.ஆனால் வாஸ்து படி 6 அடிக்கு சற்று கூடுதலான உயரம் தான் வைத்திருக்கிறார்கள்.1928 ல் கட்ட ஆரம்பித்து 1931 ல் முடித்துள்ளனர்.கட்டிய செட்டியார்,ஆச்சி, படங்கள் திண்ணையின் இரு புறமும் மாட்டியிருக்கிறார்கள். தாண்டி உள்ளே போனால் மிகப்பெரிய ஹால்.தரையிலிருந்து உத்தரம் வரை அழகிய வேலைப்பாடுகள்.அதிலேயே பால்கனி, அதையும் தாண்டிப் போனால் முற்றம் வைத்து நான்கு புற அறைகள்.அந்த கட்டிடத்தில் அறைகள் மட்டுமே 60 இருக்கிறதாம்.அறையை திறந்து காண்பிப்பதில்லை.அதற்கு பக்கவாட்டில் மிகநீண்ட டைனிங்ஹால். வெளியே வந்து திண்ணையில் அமர்ந்து அங்கிருந்த பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தோம்.கதையாய்ச் சொன்னார். நாங்கள் இருக்கும் போதே ஒரு முஸ்லிம் குடும்பத்தினர், சுற்றுலா வந்த இளம் யுவதிகள், என வந்த வண்ணம் இருந்தனர். இந்த கிராமத்தில் இவ்வளவு பெரிய மாளிகை ஏன் கட்டவேண்டும்? என்ற கேள்வி உள்ளுக்குள் நிமிண்டிக்கொண்டே யிருந்தது. ஊரில் ஒரு சிவன் கோவிலும் அழகிய குளமும் இருக்கிறது .ஊரில் நான் பார்த்த பலவீடுகள் பிரம்மாண்டமாகத்தான் இருந்தது.அந்தப்பக்கம் போகும் வாய்ப்பிருப்பவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய இடம்.

திருக்கோஷ்ட்டியூர்

சில பெயர்கள் காரணமே இல்லாமல் கவர்ந்து விடுவதுண்டு. அப்படி ஒரு பெயர்தான் “ செளம்ய நாராயணன்” நீண்ட நாள் ஆவல். திருக்கோஷ்ட்டியூர் போகவேண்டும் என்பது. 108ல் ஒன்று.
பெரியாழ்வார்,
திருமங்கையாழ்வார்,
திருமழிசையாழ்வார்,
பூதத்தாழ்வார்,
பேயாழ்வார்
என அய்ந்து ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டத் தலம்.
முதல் ஆச்சரியம் கோவிலுக்கு முன்னே இருக்கும் குளமும், அதன் எதிரே இருந்த நந்தியும்.
கோவில் உள்ளே நுழைந்ததும் முதலில் எதிர்படுபவரும் நந்தி தேவன் தான். அழகிய வேலைப்பாடு. இப்போது திருப்பணி நடைபெற்று வருவதால் சிலைகள் வெள்ளைத்துணி போர்த்தி வைக்கப்பட்டுள்ளது.சிவன் சன்னதியும் மூடப்பட்டு இருக்கிறது.
நமக்குப் புரியாத கட்டிட அமைப்புடன் இருக்கிறது கோவில்.சிவன் சன்னதிக்கு பின்புறம் குறுகிச் செல்லும் பாதையில் நடந்து பெருமாள் கோவிலுக்கான படிகள் ஏறவேண்டியுள்ளது.
விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்),
முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்),
இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்),
மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்)
நின்ற , கிடந்த , அமர்ந்த வுடன் நடந்த (நர்த்தன கிருஷ்ணர்) கோலமும் கொண்டு காட்சி அளிக்கிறார் பெருமாள்.
ஸெளம்ய நாராயணரையும் , திருமாமகள் தாயாரையும் (நிலமாமகள், குலமாமகள் என இரண்டுமாய் இருக்கிறார்) சேவித்துக் காத்திருந்தால் அஷ்டாங்க விமானத்திற்குச் செல்ல அழைத்துச் செல்கிறார்கள். அஷ்ட்டாங்க விமானம் என்றால் என்ன என்பதற்கு எட்டு கொபுரத்திற்கு நடுவில் என ஒரு விளக்கம்? சொன்னார் கோவில் ஊழியர். எட்டு தளங்கள் இருக்குமோ என நான் நினைத்திருந்தேன் மூன்று தளங்கள் தான் இருக்கிறது . மதுரை கூடலழகர், உத்திர மேரூர் ஆகிய இடங்களில் மட்டுமே இப்படிப்பட்ட அஷ்ட்டாங்க விமானங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். உண்மையில் அஷ்ட்ட கோணலாய் உடம்பை வளைத்து, அங்கம் கஷ்ட்டப்பட்டு ஏற வேண்டிய விமானம் அது. ஒரு நபர் மட்டுமே ஏறமுடியும், ஆங்காங்கே குனிந்து தவழ்ந்து ஏறவேண்டியதிருக்கிறது.ஒவ்வொரு தளமாய் ஏறி நான்கு அடி உயரமுள்ள குறுகிய சந்தின் வழியே ஒரு பால்கனிபோன்ற இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு வந்த உடன் தான் மூச்சே வந்தது எனக்கு. அங்கிருந்து தான் ராமானுஜர் ஊர் மக்களை அழைத்து அஷ்ட்டாச்சர மந்திரத்தை மக்கள் அனைவருக்கும் உபதேசித்தாராம்.அங்கிருந்து பார்த்தால் ஆளவந்தாருடைய சிஷ்யரான திருக்கோட்டியூர் நம்பி யின் இல்லம் தெரிகிறது. “ அதோ தெரியுது பாருங்க சிவப்பு ஓடு போட்ட வீடு, மேலே கூட சிலைல்லாம் இருக்கே அதுதான் நம்பியின் வீடு” என்றார் ஊழியர். வீட்டின் எதிரே சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தனர்.அதன் அடையாளமாக நாங்கள் நின்ற இடத்தில் ராமானுஜரின் சிற்பம் இருக்கிறது. நாங்களும் “ ஓம் நமோ நாராயணா”ய என்று உள்ளுக்குள் உச்சரித்துக்கொண்டோம். நம்பி எம்பெருமானாருக்கு உபதேசித்தது என்ன? என்பதில் பெரியவர்களிடையே சில டிஸ்பியூட் இன்னும் இருக்கிறது. மணவாள மாமுனிகளுடைய முமூக்ஷுப்படி வ்யாக்யானத்தில் சரம ச்லோகத்தினுடைய அர்த்தத்தை தான் ராமானுஜர் வெளியிட்டார் எனவும், 6000 படி குருபரம்பரா ப்ரபாவத்தில், ராமானுஜர் திருமந்திரத்தினுடைய அர்த்தத்தைக் கற்றுக்கொண்டதாகவும், அதைத்தான் அவர் கோபுரத்தில் ஏறி அனைவருக்கும் அறிவித்தார் என்றும் இரண்டு விதமாகச் சொல்லப் படுகிறது. இரண்டாவது தான் லாஜிக்காக ஒத்துவருகிறது. சரமச்ஸ்லோகம் தரையில் உட்கார்ந்து சொல்லிக்கொடுத்தாலே ஏறாது, விமானத்தில் ஏறியெல்லாம் சொல்லி அது மக்களுக்கு விடக்கூடிய சங்கதி அல்ல அது. அனால் சொன்னவர் மாமுனிகள் என்பதால் நோ அப்ஜக்ஷன்.ஒருவழியாகக் மீண்டும் குனிந்து வளைந்து, தவழ்ந்து, கிடந்து, கீழே இறங்கி வந்தோம். திருக்கோட்டியூர் நம்பியின் இல்லத்தையும் பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று அந்த அக்ரஹாரத்திற்கு போனோம். அழகிய தெரு.எல்லா வீடுகளுக்கும் காவிப்பட்டையை பார்க்க முடிந்தது. நம்பியின் இல்லத்தின் ( சிலை இருக்கும் வீடு) முன்னே சிறிய திண்ணை இருக்கிறது. அமர்ந்து கொண்டேன் . நான் மணிசேஷன் வந்திருக்கிறேன் என்று சொல்லாமல் அடியேன் மணிசேஷன் வந்திருக்கிறேன் என்ற மனசுக்குள் சொல்லிக்கொண்டேன் 17 முறையெல்லாம் நம்மால் வரமுடியாது அல்லவா? அங்கிருந்து பார்த்தால் ராமானுஜர் அஷ்ட்டாங்க விமானத்தில் ஏறி மக்களிடம் சொன்ன இடம் தெரிகிறது. வீடு பூட்டியிருந்தது. வீட்டில் உள்ளவர்கள் பக்கத்தில் ஏதோ ஒரு விசேஷத்திற்காக சென்றுள்ளார்கள் என்று எதிர் வீட்டு திண்ணையில் இருந்த மாமி சொன்னார். பக்கத்திலேயே இன்னோரு வீடும் திருக்கோட்டியூர் நம்பி இல்லம் என்னும் போர்டுடன் இருந்தது. உண்மையில் எந்த வீடு ? என்று மாமியிடம் வம்பு கேட்டேன். “ சிலை இருக்கு பாருங்கோ அதுதான்” என்றார். ”அப்போ இது “ என்றேன். அது அவாளே போட்டுண்டது” என்று மாமியும் தாழ்ந்த குரலில் வம்பு பேசினார்.கொஞ்சநேரம் அந்த ஒரிஜனல் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வீதியில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த சிறுவர்களை பார்த்துக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினோம். ஓம் நமோ நாராயணா”ய.
( பொதுவாக அதிஷ்டானம், பாதவர்க்கம், கபோதவர்க்கம், க்ரீவா, சிகரம் ஸ்தூபி என்ற ஆறு அங்கங்களை உடையது விமானம். இதில் இருதளங்களிலும் கருவறையை அமைப்பதால் அஷ்டாங்கம். இதில் ஒன்பது மூர்த்திகளையும் அமைப்பதால் நவமூர்த்தி ஸ்தாபனம் தகவல் உபயம் : Sankara Narayanan G)