Tuesday 24 April, 2012

திருவெள்ளறை

பிரதி வாரம் சனிக்கிழமை ஸ்ரீரங்கம் போவதும் பெரும்பாலும் தாயார் , சக்கரத்தாழ்வார் சன்னதி பார்ப்பதும் வழக்கம்.தாயார் சன்னதி பிரகாரம் சுற்றி வரும் இடத்தில் வில்வ மரத்திற்குச் சற்று முன்னதாக ஒரு தூணில் மண்டபம் கட்டி விளக்கு பொருத்தப் பட்டிருக்கும்.குனிந்து பார்த்தால் புண்டரிகாஷன்.மாமிகள் மிக உருக்கமாக வேண்டிக் கொண்டிருப்பார்கள்.எக்ஸாம் சமயம் குழந்தைகள் மிகுந்த சிரத்தையுடன் பிரார்த்தனை செய்வார்கள்.

எனக்கும் சென்றமாதம் ஒரு பிரச்சனை.எனக்குள் யாதுமாகி வியாபித்து என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தது அந்த பிரச்சனை.( என்ன என்று கேட்காதீர்கள்) .அச் சமயம் ஒரு சனிக்கிழமை தாயார் சன்னதி சுற்றிக் கொண்டிருந்த போது ஒரு பாட்டி இன்னொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.” ரெண்டு கையையும் பெருமாள் முன்னாடி பதிய வெச்சுக்கோ. மனசார வேண்டிக்கோ...நிச்சயம் நடக்கும்” - என்றாள் .ஒரு வேளை தாயார் தான் எனக்காக சொல்கிறாளோ? எனத் தோன்றியது.ஒரு நிமிடம் தயங்கினேன். 

முடிவு பெறாத ராஜ கோபுரம்


உள் கோபுரம் (சிதிலம்)


பி.சி.ஸ்ரீராம் ஸ்டைலில் எடுத்துப் பார்த்தேன்



இங்கு தான் திரு மஞ்சனம்


உத்தராயண வாசல்


நெய்தீபம் போடும் இடம்


நோ கமெண்ட்ஸ்


சாப்பிட்ட இடம்


சுனை குளம்


 என்ன ஒரு செய் நேர்த்தி



ஸ்வஸ்திக் குளம்

நீள் மதில்








மீண்டும் நடந்தேன்.வில்வமரத்தினை சுற்றி விட்டு அமர்வதற்கு முன் மீண்டும் மனதில் ஒலித்தது “ மனசார வேண்டிக்கோ நிச்சயம் நடக்கும்”.அந்த பாட்டியும் உடன் வந்த பெண்ணும் வில்வமரத்தடிக்கு வந்திருந்தார்கள்.நான் ”புண்டரிகாஷன்” இருக்கும் தூணிற்கு வந்தேன்.குனிந்து பெருமாளை பார்த்தேன்.விளக்கொளியில் பெருமாள் சிரித்தார்.அந்த பாட்டி சொன்ன மாதிரி ரெண்டு கைகளையும் பதிய வைத்தேன் கண்ணை மூடினேன்......கண்ணா.....பெருமாளே..........உடம்பு உதறியது...கண்ணீர் பெருகியது.

19.04.12 அன்று திருவெள்ளறையில் திருமஞ்சனம்.நானும் உபயம்.நானும் ஜெயந்தியும் கலந்து கொண்டோம்.த்ருமஞ்சணம் மூலவருக்கு செய்யப்படுவதில்லை. வெளியே 9 அடி மேடையில் உள்ள பலிபீடத்திற்கு தான் அபிஷேகம் சாரி.... திருமஞ்சனம்.தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி,பார்த்த  பிறாகு மூலவர் தரிசனம்.மூலவர் புண்டரீகாட்சப் பெருமாள்.மேலே வலப்பக்கம் சூரியன் இடப்பக்கம் சந்திரன் கீழே வலப்பக்கம் கருடாழ்வார் இடப்பக்கம் ஆதிசேஷன் நின்றாகோலம், நடுவில் பெருமாள் நின்றகோலம்.

வலப்பக்கம் கால்மாட்டில் தவக்கோலத்தில் மார்கண்டேயன்,இடப்புறம் பூமாதேவி தபஸ்கோலத்தில்.இங்கு மார்கண்டேயனுக்கும்,பூமாதேவிக்கும் பெருமாள் பிரத்யக்‌ஷம்.பட்டர் மிகுந்த சிரத்தையுடனும் பொறுமையுடனும் சேவை சாதித்தார்கள். ஜடாரியை சற்று விலகி நின்று வாங்கினேன்,,, அருகிலிருந்த ஒருவர் சொன்னார் கிட்டக்க வாங்கோ ...நீங்க பெருமாளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் பெருமாள் ரெண்டு அடி உங்களை நோக்கி எடுத்து வைப்பார் என்றார்.எனக்காகவே பெருமாள் சொன்ன மாதிரி இருந்தது.

 இரு வாசல்கள் உத்தராயணம் தட்சிணாயனம்.நீண்ட மதில் சுவர். கோயிலுக்கு உள்ளேயே சுனை போன்ற குளம்.அங்கிருந்துதான் அபிஷேகத்திற்கு ஜலம்.திருமஞ்சனம் முடிந்து நெய் விளக்கு போட வேண்டும்.திருமஞ்சனம் முடிந்த பிறகு கற்பூற ஆரத்தி. ”தொட்டுக் கறவால்லாம் தொட்டுக்கலாம்”- என்பார் பட்டர். கற்பூறம் ஒற்றிக் கொள்வது வைஷ்ணவ வழக்கம் இல்லை.மடப்பள்ளியில் பிரசாதம் , அக்கார அடிசல், புளியோதரை,வெண்பொங்கல், தயிர்சாதம்,பஞ்சாமிர்தம்,ஒரு கூட்டு( காரம்). கோவிலின் பின் பக்கம் ஒரு குளம் உள்ளது ஸ்வஸ்திக் வடிவில் இருக்கிறது.ஒரு பக்கம் படியில் குளிப்பவர் அடுத்த பக்கம் தெரிய மாட்டார்.(தண்ணீர் நிறைய இருக்கும் போது)  தொல்லியல் துறையின் கீழி உள்ளது.விழியில் நுங்கு, இளநீர் சாப்பிட்டு விட்டுவீடு திரும்பினோம்.

செங்கமலக் கண்ணன் என் வேண்டுதலை நிறைவேற்றி யதற்கு என்ன கைமாறு செய்ய?


மங்களாசாஸனம் -
பெரியாழ்வார் - 71, 192-201,
திருமங்கையாழ்வார் - 1368-77, 1851, 2673 (70) 2674 (117)
மொததம் 24 பாசுரங்கள்

தல வரலாறுக்கு இங்கு செல்லவும்:http://temple.dinamalar.com/New.php?id=182