Saturday 10 May, 2014

திருநெடுங்களம்

திருநெடுங்களம் என்பது திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிவஸ்தலம்.சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.பலநூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில் என பத்திரிகைகளில் கும்பாபிஷேகத்தின்போது பெட்டி செய்திகள் வந்தது.அப்போதிருந்து செல்லவேண்டும் என்பது ஆசை.சென்றவாரம் தான் வாய்ப்பு கிடைத்தது, திருச்சிக்கு அருகில் என சொல்வதைவிட தஞ்சைக்கு அருகில் என சொல்லலாம்.திருச்சியிலிருந்து டூவீலரில் சென்றால் போகிறது போகிறது ....போய்க்கொண்டே இருக்கிறது.துவாகுடி சென்று அங்கிருந்து இடப்புறம் பிரியும் சாலையில் 4கி.மீ தொலைவில் இருக்கிறது.அங்கங்கு அறிவிப்புப் பலகை வைத்து வழிகாட்டியுள்ளனர்.

இடர்களையும் ஈசன் இவர் என்பதால் பிரார்த்தனை,ப்ரீதி க்கு என மக்கள் இங்கு வந்து போகிறார்கள்.கோவிலுக்கு வெளிப்புறம் ஒருபக்கம் விநாயகர் மறுபக்கம் கருப்பண்ணசாமி இவர் ரொம்ப சக்தி வாய்ந்தவர் எனவும் வேண்டும் வரம் தருபவர் எனவும் கூறுகின்றனர்.ஆலயத்தின் எதிரேயுள்ள சுந்தர தீர்த்தக்கரை.கருப்பண்ணசாமிக்கு  ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் முதலிய நாட்களில் பானகம் படைத்து வழிபட்டால் நாள்பட்ட நோய்களும் குணமாகி நிவாரணம் அளிக்கும் எனச்சொல்கின்றனர்.

சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் முடிந்ந்திருந்ததால் கோபுரம் பெய்ண்ட் அடிக்கப்பட்டு வண்ணமயமாக மிளிர்கிறது. ஞானசம்பந்தர் இக்கோவில் உறையும் ஈசனைப் பற்றி 10பதிகங்கள் பாடியுள்ளார்.ஒரு ஆச்சரியம் என்னவெனில் அவர் பாடிய பத்துப்பதிகத்தில் உள்ள புராணக் காட்சிகள் அனைத்தும் கோபுரத்ஹ்டில் சுதைவடிவில் இருக்கிறது.இவர் பாடியதை வைத்து கோபுரம் கட்டினார்களா அல்லது கோபுரத்தைப் பார்த்து இவர் பாடினாரா என்பது வரலாற்று ஆசிரியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இக்கோபுரத்தில் உள்ள ஒரு சுதை
இது ஈசனின் வடிவம்.சிவ பெருமானின் வீரத்தினை விளக்கும் எட்டு வடிவங்களில் ஒன்று.ஓவியர் சில்பி அவர்களின் அற்புதமான ஓவியம் ஒன்று உண்டு.திருவண்ணாமலை வடக்கு வாசல் கோபுரத்தின் உள்ளே மேல் விதானத்தில் இந்த சிற்பத்தை காணலாம்.ஆனால் கீழே உள்ள படம் திரு நெடுங்குளம் கோவில் கோபுரத்தில் உள்ளது..போன மாதம் தான் குடமுழுக்கு நடந்துள்ளது.புதிதாக வண்ணம் தீட்டப் பட்டுள்ளது.இதில் ஒரு சந்தேகமும் உள்ளது இதுவரை நான் பார்த்த இதுதொடர்பான ஒவியம்ங்கள் மற்றும் சிலை இவைகளில் ஈசன் காலடியில் யானைத்தலை இருக்கும் யானையின் தோலை உறித்து இரு கைகளாலும் தூக்கி பிடித்தபடி இருப்பார் சிவன்.யானையின் கால்கள் மேல்பக்கம் இரண்டு இருக்கும்.வெளியில் தெரிவது தோலின் உள்பகுதியா? அல்லது வெளிப்பகுதியா? எது நமக்குத் தெரிவது.இதுவரை நான் பார்த்திருந்தது மேல் தோலே (கருப்பு) நமக்குத் தெரியும் இந்தச் சுதையில் யானையின் உள்தோல் (இரத்த நிறத்தில்) அழகாக காட்டப்பட்டுள்ளது.இது அக் காட்சியின் கொடூரத்தை கண்முன்னே கொண்டு வருகிறது.
“வாயே வாழ்த்து கண்டாய் மத யானை உரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்” ( திருநாவுக்கரசர் )
இது தொடர்பாக இரண்டு புராணக்கதைகள் இருப்பது சுவாரசியமானது.http://www.manivasagar.com/art_c_Yanaithoolannal.html

இங்குள்ள ஒரு கல்வெட்டு கல்வெட்டு உள்ள இடம்: சோமாஸ்கந்தர் திருமுன் வாயில் உத்திரம்.

1) ஸ்வஸ்திஸ்ர் குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 12ஆவது இத்திருமண்டபஞ் செய்வித்தான் பாண்டி கு
2) லாசநி வ[ள நாட்டு] கிளியூர் நாட்டுக் கள்ளிக்குடி அரைய மகந் ஆதித்தந் உலகநான விசையாலய முத்தரை[யன்].
கல்வெட்டுச் செய்தி: சோமாஸ்கந்தர் திருமுன்னுக்கு முன்னாலுள்ள மண்டபத்தை முதலாம் குலோத்துங்கனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் ஆதித்தன் உலகனான விசயாலய முத்தரையன் என்பார் எடுப்பித்திருக்கிறார். இவரது தந்தையார் பெயர் அரையன். ஊர் கிளியூர் நாட்டுக் கள்ளிக்குடி. 

நாங்கள் போனபோது கோபுர வாசலில் ஒரு பெரியவர் காலில் கட்டு போட்டு இருந்தார்.யாசகம் கேட்டார்.கொஞ்சம் பேச்சுக் கொடுத்தவுடன் அவரே கைடாக மாறி கோவிலின் பலபகுதிகளுக்கு அழைத்துச் சென்று சில தகவல் களைச் சொன்னர்.

இந்தக் கோவில் இரண்டு விமானங்கள் இருப்பது ரொம்ப விசேஷம்.
காரணம்சிவபெருமான் உமையவளுக்கு தனது திருமேனியின் இடப்பாகத்தில் இடம் கொடுத்ததால், இத்தலத்தின் கருவறையில் ஈசன் சிவலிங்க வடிவமாக இருந்தாலும், அரூப வடிவில் பார்வதியும் உடன் இருப்பதாக ஐதீகம். இதனால் கருவறையின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன.  கருவறை இரட்டை விமான அமைப்பு, அப்படியே காசி விஸ்வநாதர் கோவில் இரட்டை விமான அமைப்பை ஒத்துள்ளது எனக் கூறுகிறார்கள்.அம்பாள் சன்னதியில் விமானம் இல்லை என்பதையும் பார்க்க முடிகிறது.














தட்சிணாமூர்த்தி யோகத்தில் இருக்கிறார்.பூணலை தனது முட்டியில் மாட்டியவாறு யோக நிஷ்டையில் இருக்கிறார்.அவ்வளவு அழகான சிற்பம்.நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.

இங்குள்ள வராகிக்கு விரளி மஞ்சள் இடித்து இராகு காலத்தில் ஞாயிறு, வெள்ளி நாட்களில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதால், தடை பட்டு வரும் திருமணங்கள் விரைவில் நடக்கின்றன.இந்த உரலை நீங்கள் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டும் கலைநுனுக்கத்துடன் செய்யப்படுள்ள கல் உரல்.


இங்குள்ள சிவனுக்கு மாதுளம்பழம் அபிஷேகம் செய்வதால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.திருநெடுங்களநாதருக்கு மாதுளம் பழ முத்துக்களால் நண்பகலில் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். அதுவும் வெள்ளை நிற மாதுளம் பழங்களால் அபிஷேகம் செய்வது பன்மடங்கு பலன்களை பெற்றுத்தரும். திருமணம் நிறைவேறுதல், கணவன்–மனைவி ஒற்றுமை, செல்வ வளம், வீடு, நிலம் வாங்க என யாவற்றிற்கும் மக்கள் இந்த மாதுளம் பழ அபிஷேகத்தால் தீர்வு காண்கிறார்கள் இப்பகுதி மக்கள். அடுத்தமுறை வரும்போது இரண்டு மாதுளம்பழம் வாங்கி வரும்படி பெரியவர் சொன்னார்.

இறைவர் திருப்பெயர் : நித்யசுந்தரேஸ்வரர், நெடுங்களநாதர்.
இறைவியார் திருப்பெயர்: மங்களநாயகி, ஒப்பிலா நாயகி.
தல மரம்: வில்வம்.
தீர்த்தம்: அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்.
வழிபட்டோர் : அகத்தியர்.
தேவாரப் பாடல்கள்: சம்பந்தர் - மறையுடையாய் தோலுடையாய்

துன்பமின்றி இந்த உலகில் அனுதினமும் இன்பமாக வாழ ‘திருநெடுங்களம்’ ஈசன் நமக்கு திருவருள் புரிகிறார் என திருநெடுங்களம் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் திருஞானசம்பந்தர் ‘இடர்களையாய் நெடுங்களம் மேயவனே’ என வரிக்கு வரி உறுதியுடன் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருக்கோவிலின் வெளிப்புற மதிலை தாண்டினால் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜ கோபுரத்தை தரிசனம் செய்யலாம். அடுத்தாற்போல் கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளது. இதனை வழிபட்டு வெளிப்பிரகார வலம் வரவேண்டும். அப்போது வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னிதியும் உள்ளது. வெளிப்பிரகாரத்தின் வடக்கில் அகத்தியர் சன்னிதியும், எதிரே என்றும் வற்றாத அகத்தியர் தீர்த்தமும் இருக்கிறது.



அகத்தியர் வழிபட்டு பேறு பெற்ற தலம் இதுவாகும். வந்திய சோழ மன்னனுக்கு ஈசன் பேரழகுடன் காட்சி கொடுத்த காரணத்தால், இத்தல இறைவன் ‘நித்திய சுந்தரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல ஈசனை தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் முகப்பொலிவு கூடும். சகல ஜனவசியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.


சுவாரசியமான விஷயம்
பின்பகுதியில் உள்ள மண்டபத்தில் சிதில மடைந்த சிலைகள் சில உள்ளன.அதில் ஒன்று தான் மேலே உள்ள பெருமாள் சிலை.சங்கு சக்கரம் இரண்டுபக்கமும்.சக்கரம் பாதி உடைந்துள்ளது.இது எங்கிருந்து எடுக்கப்பட்ட சிலை என்று தெரியவில்லை.சைவ வைணவப் பூசல்களால் இங்கு வந்ததா எனவும் தெரிய்வில்லை.அழகான சிலை.

இத்தலத்தில் உள்ள வெண்கலக் குதிரையை தூக்கும் ஆண்களையே அந்த காலத்தில் இச்சுற்று வட்டார பெண்கள் தங்கள் கணவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.



மூலஸ்தானத்தை சுற்றிவரும் போது பல கல்வெட்டுக்களை காணமுடிகிறது.







                                                     இரண்டு விமானங்கள்