Saturday 12 December, 2015

கங்காவதார தாரணம் 2015

11.12.2015 கார்த்திகை அமாவாசை கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள் மடத்திற்குச் சென்று வந்தோம்.

 பிராமணரல்லாத ஒருவரின் பசிக்காக தன் இல்லத்தின் தாயாரின் ஸ்ரார்த்த தினத்தன்று தயாரிக்கப் பட்ட உணவை தந்ததற்காக அய்யாவாள் அவர்களுக்கு தர்ப்பணம் செய்துவைக்க மறுத்துவிட்டனர் சாஸ்திரிகள். எவ்வளவோ கேட்டும், கெஞ்சியும் அவர்கள் இறங்க வில்லை. அப்படி வரவேண்டுமென்றால் நீ கங்கைக்குச் சென்று புனித நீராடிவிட்டு வந்தால் தான் முடியும் என்று போகாத ஊருக்கு வழி சொல்லிவிட்டனர். திருவிசநல்லூர் எங்கே இருக்கிறது காசி எங்கே இருக்கிறது? என்று போய் என்று வர? .

    அய்யாவாளுக்கு கண்ணீர் பெருக்கெடுக்கிறது. வீட்டின் கிணற்றடியில் நின்று அன்றாடம் அவர் சென்று வழிபடும் சிவனை நினைத்து அழுதுகொண்டே பாடுகிறார். அப்போது அவரது வீட்டின் கிணற்றிலிருந்து நீர் பொங்கி பிரவாகமாக வெளியேறி ஊர்முழுழுதும் ஓடியதாம். கிணற்று நீர் பிரவாகமாக கங்கை வெள்ளத்தால் ஊரே மூழ்கும் அளவிற்கு சூழ்ந்தது. அவ்வூர் மக்கள் திரண்டு வந்து அய்யவாளிடம் வெள்ளத்தை கட்டுபடுத்த வேண்டினர். அந்தணர்களால் அபசாரம் ஏற்பட்டு விட்டதாக மண்டியிட்டு முறையிட்டனர். அதனால் அய்யவாள் கங்கா அஷ்டகத்தை அப்பொழுதே இயற்றி பாடினார். வெள்ளமும் கட்டுபாட்டுக்குள் வந்தது. அய்யவாள் கங்கை நீரில் ஸ்நானம் செய்து சிராதத்தை நடத்தினார். அந்த சிராததில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அந்தணர் ரூபத்தில் கலந்து கொண்டதாக கூறுவர்

அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவாசையன்று விடியற்காலை கங்கா அவதார தாரணம் ஸ்லோகங்களை பாராயணம் செய்ய காலியாக இருக்கும் கிணற்றிலிருந்து குபு குபு வென கங்கையானது நிரம்ப ஆரம்பிக்கிறது. கங்கை வெள்ளமாக பொங்கி விடாமல் கிணற்றின் நடுநிலையில் உள்ள வேண்டி கங்கா அஷ்டகம் பாடுவர். காவிரியில் குளித்துவிட்டு வந்தால் கிணற்று நீரை  பல ஆயிரம் பேர் குளிக்கும் அளவிற்கு அன்று மாலை வரையில் கிணற்றில் நீர் வந்துகொண்டே இருக்கிறது. இந்த அதிசய நிகழ்வை காண்பதற்கு எல்லா இடத்திலிருந்தும் திரளான பல ஆயிரம் பக்தர்கள் திருவிசநல்லூர் வந்த வண்ணம் இருப்பர்.

 

        இன்று அந்த ஸ்ரீ வேங்கடேச ஸ்ரீதர அய்யாவாள் வீடு மடமாக மாற்றப்பட்டுள்ளது. அந்தக் கிணறு இன்றும் உள்ளது. கார்த்திகை அமாவாசியன்று பலரும் இங்குவந்து நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டுச் செல்கிறார்கள்.
நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் இவரது சமகாலத்தவர் . திருவிசைநல்லூரில் 
அய்யாவாள் வீட்டில் கங்கை பொங்கிய அற்புதம் நிகழ்ந்த போது சதாசிவர் உடனிருந்ததாகவும் ஜய துங்க தரங்கே கங்கே என்ற கீர்த்தனை அப்போது தான் இயற்றப் பட்டது என்றும் ஒரு ஐதிகம் உள்ளது.
செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் மிகவும் இளவயதிலேயே, பூப்புக்கு முன்பே விதவையானவர். திருவிசை நல்லூர், ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் அனுக்கிரகமும் மந்திர தீட்சையும், வேதாந்த ஞான உபதேசமும் பெற்றவர் என்று சொல்லப்படுகிறது.ஆவுடையக்காள் வரலாறு பலரால் இன்று மறக்கப்பட்டுவிட்டது.( ஆவுடையக்காளின் வரலாறு சுவாமி சிவானந்தா அவர்களின் "Lives of Saints" (Published by Divine Life Society) ஆவுடைஅக்காள் பல தலங்களுக்கும் யாத்திரை செய்து இறுதியில் ஸ்ரீதர அய்யாவாள் ஆசிரமத்தை அடைந்து சிறிது காலம் அவரது வழிகாட்டுதலை வேண்டி நின்றார். அய்யாவாள் மனம் மகிழ்ந்து அவருக்கு ஆசிரமத்திலேயே தங்கி இருக்க ஏற்பாடு செய்தாலும் பிற ஆசிரமவாசிகளோ அவரைக் கண்டால் அலட்சியப் போக்கைக் கடைபிடித்தனர். விதவைப் பெண்ணுக்கு ஆசிரமத்தில் மரியாதைத் தரப்படாதது மட்டுமல்ல, அவர் நாயை விடக் கீழாக நடத்தப்பெற்றார். யாவரும் சாப்பிட்டு எஞ்சிய உணவே அவருக்கு வேண்டா வெறுப்பாக அளிக்கப்பட்டது. ஒரே பெண்மணி அதுவும் விதவைக் கோலம் என்பதனால் அவரோடு பேசுவதையே யாவரும் தவிர்த்தனர்.
ஆவுடையக்காளை நடத்திய விதம் கண்டு சீடர்களுக்கு பாடம் புகட்ட மனம் கொண்டார் அக்காளின் குரு அய்யாவாள்.ஒருநாள் தம் சீடர்களை அழைத்து காவிரி ஆற்றின் நடுவில் இருந்த மணல் மேட்டில் சென்று தியானம் செய்யுமாறு பணித்தார். அவர்களுடன் ஆவுடையக்காளும் இருந்தார். தியானத்தில் அமர்ந்திருந்த போது சீடர்களுக்கு ஆற்றின் நீரளவு உயர்ந்து வருவது புரிந்தது. அவர்கள் விழுந்தடித்துக் கொண்டு கரைசேர்ந்தனர். ஆனால் அக்காளோ தேக நினைவே இல்லாமல் சமாதியில் இருந்ததால் தன்னைச் சுற்றி நீர் சூழுமளவும் தியானம் கலையாமலே இருந்தார். கண்விழித்து பார்க்கும் போது தான் மட்டுமே சிக்கிக் கொண்டிருப்பது புரிந்தது. கரையில் இருந்த அய்யாவாள் ’அங்கேயே இரு’ என்னும் வகையில் தன் கரத்தை உயர்த்திக் காட்டினார். அவரும் குருவின் ஆணைப்படி அந்த இடத்தைவிட்டு அசையாது நின்றார். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று நாட்கள் ஒரே இடத்தில் நின்றிருந்தார். என்ன ஆச்சரியம் ! அவருடைய காலடியில் இருந்த மணல் திட்டு மட்டும் வெள்ளத்தில் கரையவே இல்லை.
போதேந்திர சுவாமிகளும், சதாசிவ பிரம்மேந்திரரும் இங்கு அமர்ந்துதான் நிறைய சம்பாஷணைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் இங்குதான் தன்னுடைய பெரும்பாலான நாட்களை கழித்துள்ளார் இது அவ்ரது அவதாரஸ்தலமும் கூட.
சென்றவருடம் 2014 ல் தான் நான் முதன் முதலில் திருவிசநல்லூர் சென்றேன். அது உணர்வுமிக்க ஒரு அனுபவமாக இருந்தது. படிக்க http://srirangamji.blogspot.in/2014/11/blog-post_23.html .
இந்த வருடம் காலையிலேயே திருச்சியிலிருந்து கிளம்பினோம் நானும் ஜயந்தியும். சென்னை வெள்ளம் , மழை ஆகியவைகளினால் கூட்டமே இல்லை. சென்றமுறை சென்ற போது 1 மைல் தூரத்திற்கு கியூ இருந்தது. இன்று ரொம்ப ஃப்ரீயாக இருந்தது. முதலில் மடத்திற்கு எதிரே உள்ள காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு



















 அங்கேயே உள்ள பிள்ளையாரை பார்த்து கொட்டிக்கொண்டு நேரே மடத்துக்குச் சென்றோம் மடத்தில் கிணற்றின் மீது ஏறி நின்று பலர் நீரை இரைத்து ( இழுத்து, சேந்தி) வருபவர்களின் தலையில் ஊற்றிக் கொண்டே யிருக்கிறார்கள் அந்த கங்கை நீரில் குளித்துவிட்டு  அய்யாவள் மடத்தில் வேண்டிக்கொண்டு பிரதக்‌ஷணம், பிரசாதம் பெற்றுக் கொண்டு எதிரே உள்ள வீட்டின் மாடியில் கங்கா ஜலத்துடன் ஏறினால் ஒரே எள்ளும் தண்ணியுமாக தர்பண மந்திரத்தின் பேரோசை. ஒரு மாமா உள்ளே உட்கார்ந்து ஆர அமற தர்பணம் முடித்துவிட்டு வெளியே வந்தோம். பிரமாதமான காபி வாசனை. “ நாதன் காபியாம் “ பொடி சேல்ஸும் நடந்தது. ஒரு டம்ளம் காபி குடித்துவிட்டு மீண்டும் மடத்துக்கு வந்து வணங்கிவிட்டு புறாப்பட்டோம். ஒன்று தெரிகிறது வருடா வருடம் வரும் கூட்டத்தில் பெரும்பகுதி சென்னை வாசிகளாகத்தான் இருக்க வேண்டும்.
 வயாதானவர்கள் நடக்க முடியாமல் வருகிறார்கள் ஒரு பழம் இன்னொரு பழத்தை கைபிடித்து அழைத்து வருவது கண்கொள்ளாக்காட்சி, உடல் ஊனமுற்றவர்கள் நடக்க முடியாமல் நடந்து வருகிறார்கள், முட்டி மடக்கி உட்கார முடியாமல் நின்று கொண்டே தர்ப்பணம் செய்கிறார் ஒருவர். பிராமணர்கள் அல்லாதவர்களை நிறையபேரை குடும்பத்துடன் காண முடிகிறது. ஒரு சின்ன திருவிழா மாதிரி பலூன், பொரி கடலை, மஞ்சள், காதோலை கருகமணி என ஊரே சந்தோஷமாக இருக்கிறது. சென்ற முறை காவிரியில் குளிக்கும் போது மழை சுகமாக குளித்தேன். இந்த முறை தண்ணீரின் அளவு ரொம்ப குறைவு.