Sunday 23 November, 2014

திருவிசைநல்லூர் ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள்

நேற்று 22.11.2014 கார்த்திகை அமாவாசைந்திருவிசநல்லூர் போய் வந்தேன். (புத்தகங்களில் திருவிசைநல்லூர் எனவும் பெயர்ப்பலகைகளில் திருவிசநல்லூர் எனவும் இருக்கிறது எது சரி?) பல வருடங்களுக்கு முன் நான் வாடகைக்கு குடியிருந்த வீட்டுக்காரரின் இல்லத்தில் “ ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்” என்னும் நூல் படிக்கக் கிடைத்தது. மஹாபெரியவாளின் வாழ்க்கையும் அன்றாட நிகழ்வுகளின் தொகுப்புமாக இருந்தது அந்தப்புத்தகம்.முதன் முதலில் அந்தபுத்தகத்தில் தான் ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள் பற்றி நான் படித்தேன்.


அந்தப்புத்தகம் எனக்கு வாழ்வின் பல திருப்பங்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. அதன் பிறகே தெய்வத்தின் குரல் தொகுப்புகளைக் அய்யாவாள் வரலாறு படிக்க இந்த லிங்க்குச் செல்லலாம்.http://www.sriayyaval.org/lsdetail.html  (தமிழில் http://tamilthamarai.com/devotion-news/2230-thiruvisanallur-temble-tamil.html   http://jaghamani.blogspot.com/2014/11/blog-post_42.html ) .

        அப்போதிலிருந்து நானும் ஒவ்வொரு கார்த்திகை அமாவாசையின் போதும் திருவிசநல்லூர் போகவேண்டும் என முயற்சித்து ஏதேனும் காரணங்களால் அது நிகழாமல் போய்விடும். இந்த முறை எனக்கு வாய்ப்பு கிடைத்தது.திருவிசநல்லூர் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கிறது. (எப்படிப் போவது  http://www.sriayyaval.org/contact.html#reach ) காலை 6.30 க்கு திருச்சியிலிருந்து கிளமபினோம். 8.30 க்குள் திருவிசைநல்லூர் அடைந்துவிட்டோம்.காவிரிக்கரையில் உள்ள ஒரு ஊர் இது. முதல் நாளே கும்பகோணம் சாஸ்திரிகள் கேசி  சில டிப்ஸ்களை செல்பேசியில் வழங்கினார். முதலில் மடத்துக்கு எதிரே உள்ள காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு பிறகு மடத்துக்குச் செல்லும் கியூவில் நிற்கவேண்டும் எனவும். பாத்திரங்கள் பைகளை காரிலேயே வைத்துவிடவும் எனச் சொல்லியிருந்தார்.




திருவிசநல்லூரை அடையும் வரை ஒரு பரபரபரப்பும் தெரியவில்லை. வானம் மூடிக்கொண்டு தூரலாக இருந்தது. ஊரை நெருங்கும் போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகங்களும் குளித்துவிட்டு வருபவர்களும், குளிக்கப் போகிறாவர்களும் என ஒரே பரபரப்பு.

சிறிய சாலை என்பதால் காவிரிக்குப் போகும் வழியில் இறங்கிக்கொண்டோம். மழை வலுத்தது. மடத்துக்குச் செல்ல நீண்ட கியூ. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் என எல்லோரும் வரிசையில். உள்ளம் குதூகலித்தது. ஆற்றுக்கு போகும் வழியில் மஞ்சள், குங்குமம், கதோலை கருகமணி எல்லாம் விற்கிறார்கள். எதற்கென்று அப்போது எனக்குத் தெரியவில்லை. மாலை தான் கேசி சொன்னார். ஒரு நதியில் குளிப்பதற்கு முன் முதலில் தீர்த்தத்தை எடுத்து தலையில் தெளித்துக்கொண்டு கொஞ்சம் உட்கொண்டு எதையேனும் கொஞ்சம் ஆற்றில் விட்டுவிட்டு பிறகு குளிக்கவேண்டும் என்பது சாஸ்திரமாம்.

காவிரி என்றால் திருச்சியில் பார்த்துவிட்டு அங்கு பார்த்தால் உய்யகொண்டான் வாய்க்கால் போல இருந்தது. அவ்வளவு சிறியது,10 படிக்கட்டுகள் இருக்கும்.

 கரையோரம் சிலர் தர்ப்பணம் செய்துகொண்டிருந்தனர். மழையோ கொட்டிக்கொண்டிருந்தது.

மழை பொழியும் போது ஆற்றில்  குளிப்பது எவ்வளவு சுகம். கொஞ்ச நேரம் குளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி கியூவில் வந்து நின்றோம்.கியூ சாலையில் கொஞ்சதூரம் சென்று இருபுறமும் தென்னைமரங்களடர்ந்த தோப்புக்கு இடையே சென்றது. ஒன்றறை மணிநேர கடத்தலுக்குப் பிறகு அய்யாவாள் மடத்தை அடைந்தோம்.


இளைஞர்கள்  4 பேர் கிணற்றின் மீது நின்று கொண்டு வாளியில் தண்ணீர் இறைத்து எல்லோருக்கும் ஊற்றினார்கள்.முழுவதும் நினையும் அளவிற்குக் குளிக்க முடியாது ஆனால் தலை நன்றாக நனையும் அளவிற்கு ஊற்றுகிறார்கள் . சிலர் 5.00 ரூ வெளியில் வாங்கிய பாட்டில்களில் ஊற்றும்போதே பிடித்துக்கொள்கிறார்கள். குளித்து முடித்தவுடன் கியூ அய்யாவாள் கோவிலுக்குள் செல்கிறது. ஈரத்துடன் தான். இந்தக் கோவிலுக்கு மட்டும் ஈரத்துடன் செல்லலாமாம் ( கேசி தகவல்) .அங்கு அய்யாவாள் பூஜித்த விகிரகங்களும் , அய்யாவாள் விக்ரகமும் இருக்கிறது. வணங்கிக்கொண்டு வெளியே வந்தால் விபூதி குங்குமம் வழங்குகிறார்கள்.வருபவர்கள் கண்டிப்பாக சாப்பிட்டுப் போகவேண்டும் என மைக்கில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் ஒரு கார் ஷெட்ல் வைதீகர்கள் தர்ப்பணம் பண்ணிவைக்கிறாரகள். ஏக கூட்டம்.முன் யோசனை இல்லாததால் தர்ப்பணத்துக்கு கொண்ட்சு வந்த பொருட்கள் எல்லாம் காரிலேயே இருந்துவிட்டது. சரி என்று காவிரி கரைக்கு போய் செய்து கொள்ளலாம் என வெளியே வந்தோம். மழை விடவில்லை, எதிரே உள்ள காவிரிக்கரையிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் கொஞ்சம் தள்ளி கூட்டம் இல்லாத இடத்தை அடைந்து கரையோரமாக தர்ப்பணம் செய்யலாம் எனத் தோன்றியது.அதன் படி கொஞ்சம் பயணம் செய்து யாருமில்லாத பகுதியில்  தடுப்பணை மாதிரி இருந்த ஒரு கரையோரம் இறங்கித் தர்ப்பணம் செய்தேன்.

 சலசலக்கும் காவிரிக்கு அருகில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது என்பது மனசுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தது.போன மாதம் திருச்சி காவிரியில்,இந்த மாதம் திருவிசநல்லூர் காவிரியில். தர்ப்பணம் முடித்து கரையேறினேன் எதிரே ஒரு வேப்பமரம். அந்த மரத்தில் ஒரு கயிறு கட்டப்பட்டு அதில் ஒரு படம் சொருகப்பட்டிருந்தது. உற்று நோக்கினேன். “ நான் இருக்கிறேன்” என்ற வாசகத்துடன்  புன்னகைத்தப்படி மஹாபெரியவா படம். கண்களில் வழிந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.




Thursday 20 November, 2014

அவள் அப்படித்தான்.

           


                    இன்றோடு ஒரு வருடம் ஓடிவிட்டது பாலா அத்தை மறைந்து.எங்கேயோ இருப்பது மாதிரியே இருக்கிறாள். அழகான ராட்சஷி.60 வயது வாழ்ந்து மறைந்தது போலவே தோன்றவில்லை. என்னமோ அல்ப ஆயுசில் மறைந்து விட்டது போலவே இருக்கிறது.அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து விட்டாள். பாலா அத்தை அப்பாவுக்கு கடைசி தங்கை. ரொம்பச் செல்லம். அந்தப்பீடம் நான் பிறந்ததும் பறிக்கப்பட்டது. அப்பாவின் கடைசி செல்லம் நானானேன் ( வழிச்சு குத்தின தோசை).அத்தைக்கும் நான் என்றால் ரொம்பப் ப்ரியம்.சின்ன வயதில் எனக்கு ரெட்டைப் பின்னல் பின்னுவதும், தாடை வலிக்க அழுத்திக்கொண்டு என் கண்ணில் மையிடுவதும்,அத்தையின் அன்றாடப் பணிகளில் ஒன்று.

              எலந்தப் பழக் கூடைக்காரி வீட்டு வாசலில் கூடையை இறக்கிவைத்துவிட்டால் மீண்டும் அதை தூக்குவதற்குள்  இரத்தக்கண்ணீர் வரவழைத்துவிடுவாள் அத்தை. அளக்கும் போதே தான் ரெண்டு எனக்கு ரெண்டு என பழம் பாஸ் ஆகிக்கொண்டே இருக்கும்.உழக்குக்கு மேல் இன்னும் ஒரு உழக்கு அளவிற்கு கையை வைத்து அளக்கும் அத்தையின் சாமர்த்தியம் அழகு.நடு நடுவே அந்த கூடைக்காரியிடம் குசலம் விசாரிப்பு வேறு நடைபெறும்.

           என் பால்யம் அத்தையுடன் பெரும்பாலும் இருந்தது.ஆற்றில் தண்ணீர் வந்து வடியும் சமயத்தில் விடுமுறை நாட்களில் அத்தையுடன் ஆற்றுக்குச் செல்வேன். துணிகளை சின்ன மூட்டையாய்க் கட்டி என் தலையில் வைத்துவிட்டு தானும் ஒரு மூட்டையுடன் ஆற்றுக்கு வருவாள்.அத்தை கரையோரம் துணி துவக்க நான் நீரில் ஊறிக்கொண்டிருப்பேன் துணி முடித்து திரும்பும் வரை.

      எதையும் சாதாரணமாக பார்க்கவோ, சொல்லவோ தெரியாது அத்தைக்கு. எல்லாவற்றிலும் ஒரு ஆச்சரியமும், அதிசயமும் இருப்பதாகவும் அதை அத்தைதான் கண்டுபிடித்தது போலவும் பேசுவாள். அது உப்புபெறாத விஷயமாக இருக்கும் ஆனால் அத்தை அத்தனை ஆலாபனைகளோடு நீட்டி முழக்கி சொல்வாள். எனக்கு அப்போதெல்லாம் அது தேவதைகள் நிறைந்த உலகில் சொல்லப்படும் கதைபோல இருக்கும்.

         அத்தையின் கையை பிடித்துக்கொண்டு அவள் வேகத்துக்கு விருத்தாம்பாள் கோவில் சுற்றுவது அவ்வளவு லேசு அல்ல.தினமும் 16 சுற்று சுற்றுவாள். எல்லாமே அசுர சாதகம்தான்.ஏதோ ஒரு சதவீதம் தப்பி அத்தை பெண்ணாக பிறந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றும்.

           சுடுகாட்டுக்குப் வரும் பெண்களை பார்த்திருக்கிறீர்களா?. என் பாட்டி, பெரியம்மா, அத்திம்பேர், அப்பா,சித்தப்பா என எல்லோருடைய எரியூட்டல் நிகழ்விலும் நான் சுடுகாட்டில் அத்தையுடன் இருந்திருக்கிறேன். நேற்று எரிக்கப் பட்ட உறவுகளை இன்று கையில் கண்டங்கத்தரி கட்டிக்கொண்டு குச்சியால் சாம்பலைக் கிளறி தேடுவாள். ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு கமெண்ட் அத்தையிடமிருந்து வரும். இந்த எலும்பை பார்த்தியா? மஞ்சளா இருக்கு பார்? எல்லாம் அவ்ளோ மாத்திரை மருந்து என அப்பாவுக்குச் சொன்னாள்.” ”ஒரு எலும்பு கூட கிடைக்கலையே? பூ மாதிரி பஸ்பம் ஆயிட்டாரே?”- இது திருவாரூர் அத்திம்பேருக்குச் சொன்னது.கிட்டத்தட்ட பிரேதத்தை வைத்து அனாடமி வகுப்பெடுக்கும் மருத்துவ ஆசிரியரைப்போல அத்தை சொல்லிக்கொண்டு போவாள்.எனக்கு அத்தையின் இந்த ஆராய்ச்சியெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.

               ஒரு வசந்த காலத்தில் அத்தைக்குத் திருமணம் ஆனது. அந்த ராஜகுமாரி எங்கள் வீட்டைவிட்டு சந்தோஷமாக டாடா காட்டிக்கொண்டே போனாள். பொதுவாக திருமணமாகி புகுந்த வீடுச் செல்பவர்கள் கண்கலங்குவார்கள் அல்லவா அந்த மரபெல்லாம் அத்தையிடம் இல்லை. வேனில் ஏறிக்கொண்டு டாடா காட்டினாள். அப்பாவுக்குத் தான் கண்கலங்கியது. ஒரு பெண் கணவனால் மதிக்கப்பட்டும், போற்றப்பட்டும், ஆராதிக்கப்பட்டும் இருந்துவிட்டால் அவள் முகத்தில் இருக்கும் பூரிப்புக்கு எல்லையே இல்லை.அத்தைக்கும் அப்படியொரு ராஜகுமாரன் தான்  வாய்த்தார்.அவள் கையில் கிடைத்த ஸ்டியரிங் மூலம் அவள் விரும்பியபடியெல்லாம் பயணித்தாள்.

                   கால ஓட்டத்தில் ஒரு சமயம் அவளை பகைத்துக்கொண்டு நான் திருமணம் செய்தபோது பலமாக எதிர்த்தாள். சாபம் விட்டாள்.செல்லும் இடங்களில் எல்லாம் வன்மத்தை விதைத்தாள்.எதிலும் தீவிரம் தான்.

                       எனக்கு மகன் பிறந்த உடன் பார்க்க ஓடி வந்தாள். அதன்பிறகான என் வளர்ச்சியை கண்டு பெருமைப்பட்டாள்.எந்த நிகழ்ச்சிகளுக்குப் போனாலும் ஓடி வந்து ”வாடா மணி” என வாஞ்சையுடன் அழைப்பாள். பாசாங்கு இருக்காது. எல்லோரும் பார்க்கும்படி தனியே அழைத்துப் போய் ஏதாவது பேசுவாள். திருமண வைபவங்களில் என் மனைவி ஜெயந்தி எங்கிருக்கிறாள் என்று தேடிவந்து பூவை தலையில் வைத்துவிடுவாள்.

                எல்லாவற்றிலும் வேகம்…அன்பு காட்டுவது என்றாலும், அதிகாரம் செய்வது என்றாலும், அடியோடு வெறுப்பது என்றாலும்….அது தான் பாலா அத்தை. பெரியவ்ன் ஆனபிறகான காலங்களைவிட பால்யத்தில் குறைந்தகாலம் பாலாஅத்தையுடன் இருந்ததே இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அது எந்தக் கசடும் கலக்காத நதியைபோன்றது.

     இப்போது ஏதாவது சந்தோஷத்தை பகிரவேண்டிய தருணத்தின் போது அத்தையைத்தான் முதலில் தேடுகிறது மனது. . இப்போதும் நான் நடு ஆற்றில் குளித்துக் கொண்டிருப்பது போலும் கரையில் அத்தை துணி துவைத்துக்கொண்டிருப்பது போலும் தான் உணர்கிறேன்..

          இப்படியெல்லாம் எழுதப்பட்டதனால் இவள் தான் பாலா அத்தை என எந்த முடிவுக்கும் வந்துவிடவேண்டாம். அவள் யாராலும் அளக்கமுடியாதவள். பிரம்மனின் அபூர்வப் படைப்பு. என் சந்ததியில் யாருக்காவது அவள் மீண்டும் பிறப்பாள்.அவளுக்கு வாழும் ஆசை இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது.வாழ்வதற்கென்றே படைக்கப்பட்டவள் அவள். அத்தை அழகானவளா? ஆமாம்…கோபக்காரியா? ஆமாம்…..அன்பானவளா? ஆமாம்….. குழந்தை மாதிரியா? ….ஆமாம்,…இன்னும் எத்தனை ஆமாம்களும் போடலாம்…. ஏனெனில் “ அவள் அப்படித்தான்”

Wednesday 19 November, 2014

ருத்ரையா

எங்கள் ஊரில் மூன்று சினிமா தியேட்டர்கள் இருந்தன. சந்தோஷ்குமார், ராஜேஸ்வரி, தங்கமணி, மொதகொட்டா, நடுகொட்டா, கடேசிகொட்டா, இப்படித்தான் எங்கள் மக்கள் அத் திரையரங்குகளை பேரிட்டு அழைப்பார்கள். போனவாரம் விருத்தாசலம் போனபோது ”நடுகொட்டாய்” பாழடைந்து இருந்ததைப்பார்த்தேன்.


 ”அவள் அப்படித்தான்” 1978 ல் வெளி வந்த போது (14 வயதுநடுக்கொட்டாய் - ல் போய் பார்த்தேன் கொஞ்சநாள் முன்னால் அப்படத்தின் முழு படத்தி லிங்க் அறந்தை மணியன் https://www.facebook.com/aranthai.manian?fref=ts  அவர்கள் மூலமாக முகநூலில்  https://www.youtube.com/watch?v=YKXXu4Dl_ps   கிடைத்து மீண்டும் அந்தப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது .வசனம் வண்ணநிலவன்,சோமசுந்தரேஷ்வர்,ருத்ரையா என டைட்டிலில் வரும்.செதுக்கிய வசனங்கள்.டாய்லெட் காட்சியைக்கூட அற்புதமாக காட்சி படுத்தியிருப்பார்.அந்த வயதில் அதற்கு முன் நான் பார்த்த படங்களில் இருந்து வித்தியாசமாக இருந்தது என்பது மட்டும் புரிந்தது. அதற்கு மேல் என்ன புரிந்து விடப்போகிறது 14ல். அந்தப்படம். எங்கள் ஊரில் ஓடவில்லை. மூன்று நாளில் தூக்கிவிட்டார் செட்டியார்.    கொஞ்சநாட்களுக்குப் பிறகு மீண்டும் நடுக்கொட்டாயிலேயே இப்படம் திரையிடப்பட்டு ஓடியது. அடுத்து கிராமத்து அத்யாயம் ….1980ல் நந்தகுமார் கதாநாயகன். (அந்தக்கால பவர்ஸ்டார் மாதிரி இருப்பார்.)




பாரதிராஜாவே 77 ல் பதினாறுவயதினிலே கிராமத்து சப்ஜக்ட் எடுத்துவிட்டு 78 ல் சிகப்பு ரோஜாவுக்கு நகரத்துக்கு குடிபெயர்ந்தார். ருத்ரையா நகரத்திலிருந்து கிராமத்துக்கு வந்து நட்டமானார். இளையராஜாவின் அற்புதமான பாடல் பட்டி தொட்டி எங்கும் அக்காலத்தில் பாடப்பட்டது “ ”ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேக்குது”.அதே படத்தில் “பூவே இது பூஜைக்காலமே” பாடல் இளையராஜாவிடமிருந்து இளையராஜா காப்பி அடித்த மாதிரி இருக்கும். https://www.youtube.com/watch?v=HU_qgIJe7Mw .”ஊதக்காத்து வீசயில குயிலு கூவையில” பாடல் பிரபலமானது.நல்ல படங்கள் ஏன் ஓடுவதில்லை என்பற்கான ஸ்கேன் ரிப்போர்ட் எப்போதும் தப்பாகவே இருக்கிறது. எத்தனையோ படங்கள் ஓடாமல் இருந்திருக்கிறது. அதனால் ஒரு சிலர் நட்டமடைந்திருக்கலாம். ஆனால் கிராமத்து அத்யாயம் போன்ற படங்கள் ஓடாததால் ஒரு தலைமுறையே அற்புதமான இயக்குனரின் படைப்புகளை இழந்துள்ளது.அதற்குப் பிறகு அவர் ஏதும் இயக்கியதாகத் தெரியவில்லை. அதற்குப்பிறகு இவர் என்ன செய்து கொண்டிருந்திருப்பார் என தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறது .


இரண்டு படங்களை மட்டுமே தமிழில் இயக்கி தமிழ்த்திரைப்பட உலகில் தனக்கென தனியிடம் பிடித்த சிறப்புப்பட்டங்கள் ஏதும் பெறாத இயக்குனர் ருத்ரையா அவர்கள் மறைவு தமிழ்த்திரைஉலகத்துக்கான பெரும் இழப்பு.இவர் திருச்சியில் படித்தவர்.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்தவர், டைட்டிலில் அனந்துவுக்கு நன்றி சொன்னவர்.இவர் மீது வெறி கொண்டவர்கள் தமிழ் சினிமாவிலும் அப்பாலும் https://arunthamizhstudio.wordpress.com/2013/04/03/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/ நிறைய பேர் இருக்கின்றனர்.


Thursday 2 October, 2014

ஆணழகு

                           
”சார் உங்களுக்கு ஓவர் வெயிட்.பத்து கிலோ வெயிட்டை குறைக்கோனும்”
டெய்லி வாக்கிங்க் போங்க, முடிஞ்சா ஜாக்கிங்க் கூட போகலாம் புல் அப்ஸ் மாதிரியான எக்சர்சைஸ் செய்யோனும்,

டாக்டர் சொல்லிக்கொண்டே பேடில் நெடும் தொடர் ஏழுதிக்கொண்டிருந்தார்.
”இது நானா வளர்த்த உடம்பில்ல தானா வளர்ந்த உடம்பு சார்”  எனச் சொல்ல வேண்டும் போலிருந்தது.

வளர் இளம் பருவத்தில் நான் என்னை பெரியவனாகவும், மீசைமுளைத்தவனாகவும், பலாக்கிரமம் பொருந்தியவனாகவும் கட்டிக்கொள்ள பிரம்மப் பிரயத்தனம் செய்துள்ளேன். சாம்பாரும் தயிர்சாதமுமே சாப்பிட்டு வளர்ந்த தேகம். தட்டு நிறைய கொட்டிக் கொண்டாலும் வயிற்றைத் தவிர வேறு ஏதும் பெருக்காது. வீட்டிலும் “பிருங்கி மகரிஷி” என்றே பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள். பள்ளியில் நண்பர்களுக்கு இடையே நோஞ்சானாகவும் மீசைமுளைகாதவனாகவும் இருப்பது எனக்கு கூச்சத்தைக் கொடுத்தது.என் அத்தை மகன் ”சிவா” எனக்கு சீனியர். நல்ல உடல்வாகு கொண்டவர் .ஃபுட்பால் , கபடி என பல விளையாட்டுகள் விளையாடுவதும் அதைப்பற்றி எங்களிடம் சிலாகிப்பதும் நான் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருப்பதும் வாடிக்கை.முட்டையை உடைத்து அப்படியே விழுங்கிட்டு கிரவுண்டை ரெண்டு சுற்று சுற்றினால் உடம்பு நன்றாக தேறிவிடும் என அவன் கூறியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு விடுமுறை நாளாகப் பார்த்து ஒரு சுபயோக சுபதினத்தில் நாட்டு முட்டையை ( அது தான் ரொம்ப சத்தாம்) கடையில் வாங்கி கால்சட்டையில் வைத்துக்கொண்டு இருவரும் ஸ்கூல் கிரவுண்டுக்கு போனோம்.
     முட்டையை எப்படி உடைப்பது என்பது தெரியாமல் நான் முழித்துக்கொண்டிருந்த போது “ இப்படித்தாண்டா உடைக்கனும் “ என லாவகமாக ஒரு தட்டு தட்டி மூடியை கழற்றுவது போல மேலே சின்ன ஓட்டை செய்துவிட்டான் சிவா.எனக்கும் உடைத்துக் கொடுத்தான். இளநீர் குடிப்பது மாதிரி அண்ணாந்து வாயினுள் கொட்டி ஒரே விழுங்காக விழுங்கினான் . அவன் அசால்டாக ஓட்டை தூக்கி யெறிந்த லாவகம் எனக்குப் பிடித்திருந்தது. அதற்குள் நான் உடைத்த முட்டையை முகர்ந்து பார்த்துவிட்டு குமட்டலின் உச்சத்துக்குப் போயிருந்தேன். உடம்பு தேறவேண்டுமானால் இதெல்லாம் பார்க்கக் கூடாது ஒரே முழுங்காக முழுங்கு என “ஊக்கம்” கொடுத்துக் கொண்டிருந்ெதான்  சிவா.மாத்திரை சாப்பிடும் போது அம்மா சொல்லச்சொல்லுவாள் “ வைத்யோ நாராயணா ஹரிஹி” .மனசுக்குள் சொல்லிக்கொண்டே மூச்சைப் பிடித்துக் கொண்டு முட்டையை அண்ணாந்து வாயினுள் ஊற்றினேன்.என் நேரம் துவாரம் சின்னதாக இருந்ததால்  வெள்ளைக்கரு மட்டும் ஒழுகி மஞ்சள் கரு முட்டையிலேயே தங்கி விட சிவா கடிந்து கொண்டான் “மஞ்சக்கரு தாண்டா சத்தே அதை முழுங்குடா” என்றான்,இவனுக்கு யார் இதெல்லாம் சொல்லிக்கொடுத்தது என ஆச்சரியமாக இருந்தது. மேலே தூக்கி உலுக்கினால் லேசில் விழுவேனா என்றது மஞ்சள் கரு. வேகமாக உலுக்க அது எனது வாயின் மேற்பகுதியில் மூக்கிற்கு சற்று கீழே விழுந்து வழுக்கிக்கொண்டே வாயில் விழ ஏற்கனவே இருந்த குமட்டலுடன் இதுவும் சேர்ந்துகொள்ள வயிறுக்குள்ளிருந்து காலையில் சாப்பிட்ட பழையசாதமும் மாவடுவும் எரிமலையாய் குமுறி வெளியேறியது.கூடவே மஞ்சள் கருவும். ”அட போடா வேஸ்ட் பண்ணிட்டயே” என நொந்து கொண்ட சிவா.அத்தோடு விடாமல் வா ஓடலாம் என தயார் ஆனான்.முட்டையின் மணமும் காலைசாப்பிட்ட ஆகாரம் வெளியேறியதும் எனக்கு ஒரு வித தள்ளாமையை கொடுத்திருந்தது ”நீ போயிட்டுவா” என சொல்லிக்கொண்டு உட்கார்ந்துவிட்டேன். முட்டை வீச்சம் என் உடம்பெல்லாம் அடித்துக்கொண்டிருந்தது. ஆற்றங்கரைக்கு வந்து நன்றாய் ஒரு முழுக்கு போட்டேன் தண்ணீரில் மூழ்கி மணல் எடுத்து முகமெல்லாம் பூசிக்கொண்டேன் என்ன செய்தாலும் முட்டை வாசம் மட்டும் போகவேயில்லை.அத்தோடு சரி மறுபடியும் அந்த விஷப்பரிட்சையில் இறங்கவேயில்லை.
ஆனால் உடம்பை தேத்தும் ஆசை விடவில்லை. அடுத்தவார விடுமுறையிலும் இந்த விக்ரமாதித்தன் மனம் தளரவில்லை. பள்ளிக்கூடத்தில் பார், புல் அப்ஸ் என கிரவுண்டிலேயே ஒரு பகுதியில் இருக்கும். அதற்கும் சிவாதானே ஹீரோ. உயரமாக இருக்கும் கம்பியை பிடித்துக்கொண்டு புல் அப்ஸ் எடுக்க வேண்டும். சிவா அஞ்சு,ஆறு , ஏழு என எடுத்துக் கொண்டே இருந்தான்.இறங்கியவுடன் என்னை எம்பி மேலே உள்ள கம்பியை பிடிக்கச்சொன்னான்.என் முயற்சியை பார்த்து பாவப்பட்டு ”நான் தூக்கி உடறேன் அப்படியே புடிச்சுண்டு எம்புடா” என்றான். ஏற்றிவிட்ட வாக்கிலேயே தொங்கிக் கொண்டிருந்தேன்.அதிக பட்சமாக காலிரண்டையும் உதைத்துக் கொண்டிருந்தேன் அதற்கு மேல் ஏதும் எழும்பவில்லை.ஓரளவிற்கு மேல் தொங்கமுடியவில்லை. உடம்பிலிருந்து கைகள் இரண்டும் தனியாகப்போய்விடும் போல் இருந்தது.முடிச்சு போட்ட டிரவுசர்,அதனை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த அரைஞான் கயிற்றின் கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடுமென உணர்ந்த நேரத்தில்.” ஒரே குதி . அவ்வளவுதான்.குதித்தவேகத்தில் கனுக்கால் இரண்டும் கட்டிவைத்து அடித்ததுபோன்ற ஒரு வலி.இது என் வயசுக்கு தகுதியானது அல்ல என ஒரு முடிவுக்கு வந்தேன்.
   அடுத்து இருந்த ஒரே அஸ்திரம் பார்.விடவில்லை அடுத்த வாரம் பார் செய்ய சிவாவுடன் போனேன்.அவன் தானே கோச்.இரண்டு கம்பிகளுக்கு இடையே அவன் ஏகப்பட்ட சாகசங்கள் செய்து காட்டினான்.அவனது இரண்டு பக்க மார்பகங்களும் புடைத்துக்கொண்டு இருந்தன.எனக்கு சட்டையை கழற்றவே கூச்சமாக இருந்தது.அவனைச் சொல்லியும் குற்றமில்லை எனக்கு எப்படியாவது சொல்லிக் கொடுத்துவிட வேண்டும் என்கிற வெறி அவனுக்குள் இருந்தது. இருந்து என்ன பயன் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? என்னை ஏற்றி விடுவான் ஏற்றிவிட்ட மாதிரியே நிற்பேன்.”முட்டிய வளை,இறங்கு” என கத்துவான் எனக்கு இறங்கினால் அவ்ளவுதான் ஏறமுடியாது. எல்லாம் செய்து முடித்த பிறகு தலைகீழாகத் தொங்குவான் சிவா.அப்படி செய்தால் தான் ரத்தம் தலைக்கு வரும் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பான்.நான் பார்கம்பியில் உருப்படியாய் செய்த ஒன்றே ஒன்று உண்டென்றால் அது இப்படி தலைகீழே தொங்குவதுதான்.அது மட்டும் தான் எனக்கு எளிதாய் இருந்தது.கொஞ்சநாள் சிவாவுடன் சென்று வவ்வால் மாதிரி தொங்கிவிட்டு வருவேன்.வந்த உடனே தலைகீழாக தொங்கும் என்னை மற்ற பாடிபில்டர்கள்? வினோதமாக பார்க்கத் துவங்கினார்கள்.இதன் பிறகு நமக்கு இதெலாம் ஒத்துவராது என முடிவுக்கு வந்து நானாக கிரவுண்டுக்குப் போவதை நிறுத்திக்கொண்டேன்.கல்லூரி படித்து முடிக்கும் வரையிலும் பிருங்கியாகவே இருந்து விட்டேன்.பகவான் எதையும் கேட்கும்போது கொடுக்க மாட்டான் போலிருக்கிறது.இப்போது டாக்டர் சொல்கிறார் மறுபடியும் கிரவுண்டு, ஜாக்கிங்……


Saturday 20 September, 2014

புரட்டாசி முதல் சனிக்கிழமை

. “போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகனூர்” ஸ்ரீரங்கத்தில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை பெரியபெருமாள் , தாயார், சக்கரத்தாழ்வார்,சேவை.பெருமாள் என்னை நோக்கி எட்டு அடி எடுத்துவைக்கிறார் நான் ஒரு அடி எடுத்து வைத்தால்.சக்கரத்து ஆழ்வார் சன்னதி சன்னல் ஓரம் பெயர்க்கப்பட்டு புதிய வேலைப்பாடுடன் கூடிய பூச்சு வேலை நடந்து வருகிறது.கோவிலில் ஆங்காங்கே அனடபத் தூணை வளைத்து பிற்காலத்தில் அறைகளாக தடுக்கப் பட்டிருந்த பல பகுதிகள் இடிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக தாயார் சன்னதி வலப்புறம் பெரிய இடம் இதுநாள் வரை தெரியாமலே இருந்தது.பெருமாள் தைலக் காப்பு. பாதி உடல் ஒரு திரையிட்டு மூடப்பட்டிருந்தது.எண்ணை பூசிய முகத்துடன் கருகரு வென மின்னிக்கிடந்தார்.நம்பெருமாள் கலையிலேயே புரப்படு ஆகி சந்தனு மண்டபத்தில் இருந்தார்.நான் தான் பார்க்கவில்லை.கோவிலில் ம்துரையிலிருந்து வந்திருந்த ஒரு பெண்கள் கூட்டம் பச்சைப்புடவை கட்டிக்கொண்டு ஆங்காங்கே அதிகாரம் செய்துகொண்டிருந்தார்கள்.இதன் பெயர் கைங்கர்யமாம்.அந்தோ.....சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஒரே கூச்சல்...வேண்டி வருபவர்கள் மனது ஒருமுகப்படுத்த முடியாத அளவுக்கு இவர்களின் காட்டுக் கூச்சல்.நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்த வேண்டும். தாயார் சன்னதியிலோ சின்ன இடம் சேவை முடிந்து தாயாரை பார்க்க விரும்புவர்கள் கொஞ்சம் வரிசையில் வருபவர்களுக்கு இடம்விட்டு  பின்னால் தள்ளி நின்றுகொண்டு  பார்க்கலாம்.இந்த மகளிர் கூட்டம் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துகொண்டு ஒரே ஆரவாரம். சரி இதையெல்லாம் பார்க்கவா வந்தோம் என புத்தியை தாயார் மீது திருப்பி தரிசனம் முடித்தேன்.ஸ்ரீரங்கம் மேல சித்ரவீதியில் கோதை வீடு.அவள் கணவருக்கு ராமர் கோயில் கைங்கர்யம்.தட்டு நிறைய வெண்பொங்கலும் சட்னியும் வைத்துக் கொடுத்தாள்.தேவாமிர்தம், விடுமுறைக்கு வந்த பிள்ளை மீண்டும் ஊருக்குப் போகும்போது அம்மா இத எடுத்துண்டு போ, அத எடுத்துண்டு போ,,, என சொல்வது மாதிரி ரவாலாடு இதுல வெச்சிருக்கேன்,இந்த டப்பாவுல சீடை வெச்சிருக்கேன் என எல்லா வற்றையும் மனைவி கையில் திணித்தாள் கோதை. என்னோடு பணியாற்றியவள் ஓய்வு பெற்றுவிட்டவள்.என்ன கைமாறு செய்யமுடியும் இந்த அன்பிற்கு.நினைவில் நிற்கும் முக்கால் டம்ளர் காபி “ மற்றொன்றும் வேண்டா மனமே” என திருப்தி பட்டுக்கொண்டே வெளியில் வ்ந்தோம்.ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு கோதை சொன்னது.ரங்கா பிடிக்கவில்லை ஜோசப்தான் பிடித்திருக்கிறது.
பி.கு 
ரங்காவும் ,ஜோசப்பும் காபிபொடி கடைகளின் பெயர்.

Monday 18 August, 2014

திருஈங்கோய்மலை

               ”கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் 

             என்று நம்மாழ்வாரின் ஒரு பாசுரம் உண்டு. முதிர்ச்சி அடைந்தால் முட்டி தளர்ந்துபோகும் உடம்பில் தெம்பும் இளமையும் இருக்கும் போதே மாலிருஞ்சோலை போய்வரவேண்டும் என்பதான பாடல்.கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் என்னென்ன பண்ணவேண்டுமோ அத்தனையும் பண்ணியாச்சு.இப்போது கெடுவதற்காக ஸ்டார்ட் ஆன சமயத்தில் கோவில் குளம் என அலைந்தால் முட்டி கழளாமல் என்ன செய்யும்.அப்படி ஒரு பாக்கியம் 16.8.14 அன்று கிடைத்தது.

            உயர்ந்தமலை அதில் ஒரு கோவில் பக்கத்திலேயே நிறைந்து ஓடும் காவிரி எப்படி இருக்கும் நினைத்துப்பருங்கள். அப்படியான ஒரு கோவில் தான் திருஈங்கோய்மலை.திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் (சாலை என்றுதான் பெயர்) முசிறி தாண்டி 1 கி.மீ இருக்கும் மலை.அகத்தியர் ஈ உருவத்தில் வழிபட்டதால் இந்தப் பெயர் என சொன்னாலும் ஈமலை,ஈவூர்,ஈகோயில், என மறுவினால் லாஜிக் இருக்கு.”ஈங்கோய்” என மறுவுவதை செரித்துக் கொள்ள முடியவில்லை.திருச்சி பக்கத்து மக்கள் எல்லாவற்றிற்கும் “ங்””ஞ்” சேர்த்து பேசுவது வழக்கம். அவர்களுக்கு என்பது ”அவிஞ்ஙளுக்கு” என விளிப்பார்கள் அப்படி ஏதோ மாறிவிட்டது போலிருக்கிறது.சரி கதைக்கு வருவோம்.

எபிசோடு 1:  ஒரு சமயம் தென்திசை வந்த அகத்தியர் சிவபெருமானை வழிபட இந்த கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது கோவில் நடை அடைக்கப்பட்டு விட்டது. தனக்கு காட்சி தரும்படி சிவபெருமானை அகத்தியர் வேண்டினார். மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி விட்டு வந்தால் தன்னை தரிசிக்கலாம் என்று அசரீரி சொன்னது. அதன்படி அகத்தியர் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடியபோது, ‘வடிவம் பெற்றார். பின்னர் இந்த மலை மீது பறந்து வந்து கோவில் சன்னிதி கதவின் சாவித் துவாரம் வழியாக உள்ளே நுழைந்து சுவாமியை தரிசனம் செய்தார். பிறகு மீண்டும் தனது பழைய வடிவம் பெற்று திரும்பினார் என்பது தல புராணம் சொல்லும் கதை.(உண்மையில் படியேறி வரும் கஷ்டத்துக்கு நாமும் ஈயாகவே மாறி பறந்து வந்திருக்கலாம் என எங்களுக்குத் தோன்றியது)
ஆடிக் கிருத்திகை அன்று படி பூஜையும், ஆடிப் பெருக்கு விழாவும் இங்கு சிறப்பாக நடைபெறுமாம். நாங்கள் போனபோது அவைகள் நடந்து முடிந்ததற்கான சுவடுகளை காண முடிந்தது.( சுற்றிலும் பிளாஸ்டிக் பேப்பர்கள்) மலை அடிவாரத்தில் மற்றொரு சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள சுவாமி கைலாசநாதர் என்றும், அம்பாள் கரணகடாட்ஷாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
மலைமேல் உள்ள கோவிலின் அம்பாளின் பெயர்மரகதாம்பிகை. நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அம்பாளின் கருவறை விமானம், கோபுரம் போன்று மூன்று கலசங்களுடன் இருக்கிறது. கருவறை கோஷ்டத்தில் மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை காலுக்கு கீழே மகிஷனுடனும், மற்றொரு துர்க்கை சாந்தசொரூபியாகவும் உள்ளனர். ஒரே இடத்தில் துர்க்கையின் இரண்டு வடிவங்களையும் காண்பது அரிதானது என அர்ச்சகர் சொன்னார்.

எபிசோடு 2:  ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்களில் யார் பெரியவர்? என போட்டி வந்தது. வாயு பகவான் தனது பலத்தை நிரூபிக்க பலமாக காற்றை வீசச் செய்தார். உடனே ஆதிசேஷன் மந்திர மலையை இறுகச் சுற்றிக்கொண்டார். அப்போது அந்த மலையின் சிறு, சிறு பாகங்கள் பூமியில் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த பாகத்தின் ஒரு பகுதிதான் இந்த திருஈங்கோய்மலை என்று கூறப்படுகிறது. சிவபெருமான், ஆதிசேஷனையும், வாயு பகவானையும் சமாதானம் செய்து இந்த மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளினார். மரகத அசலத்தில்(மலையில்) எழுந்தருளியவர் என்பதால் மரகதாசலேஸ்வரர் என்ற பெயர் பெற்றார். இவருக்கு திரணத் ஜோதீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.அகத்தியர் வழிபட்டதற்கு பின்னர் திருஞானசம்பந்தர் இங்கு நேரில் வந்து வழிபட்டுதிருஈங்கோய்மலையாரேஎன்று ஆரம்பிக்கும் 10 பாடல்களையும், நக்கீரர் 70 பாடல்களையும் பாடியுள்ளனர்

     ஆண்டுதோறும் மாசி மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் காலை 6 மணியில் இருந்து 6.35 மணிக்குள் 5 நிமிடங்கள் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் மூலவர் மரகதாசலேஸ்வரர் மேல் பட்டு பொன்னிற மேனியாக காட்சி அளிப்பதை பார்க்கலாம் எனவும் அர்ச்சகர் கூறினார்.
இந்த மலையின் அடிவாரத்தில் லலிதாம்பிகை பீடம் உள்ளது. இந்த இடம் முக்கிய வழிபாட்டு இடமாக உள்ளது. இங்கு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களின் நலன்கருதி இங்கு ஹோமங்கள் நடத்தப்படுகிறது. கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு  இங்கு பள்ளி அமைத்து பாடம் சொல்லி தரப்படுகிறது.

இங்கு கடவுள் பெண் தன்மையாக போற்றப்படுகிறதுலலிதாம்பிகை முதல் கடவுளாக கொண்டு இங்கு பூஜைகளும், பல நற்காரியங்களும் நடத்தப்படுகிறது.

காலை 10.00 மணிக்கு மேல்தான் சன்னதி திறக்கப்படுகிறது.உச்சி வெயிலில் கால் பொடிஒட்ட இறங்கி வருவது தீமிதித்தது போலிருந்தது.ஆசுவாச்ப்படுத்திக் கொள்ள ஒரே ஒரு மண்டபம் மட்டும் வழியில் உள்ளது. மற்றபடி கொஞ்சம் பெரிய போன்சாய் ஆலமரங்கள் மட்டுமே இளைப்பாறுவதற்கு.