Friday 25 November, 2016

திருக்கோஷ்ட்டியூர்

சில பெயர்கள் காரணமே இல்லாமல் கவர்ந்து விடுவதுண்டு. அப்படி ஒரு பெயர்தான் “ செளம்ய நாராயணன்” நீண்ட நாள் ஆவல். திருக்கோஷ்ட்டியூர் போகவேண்டும் என்பது. 108ல் ஒன்று.
பெரியாழ்வார்,
திருமங்கையாழ்வார்,
திருமழிசையாழ்வார்,
பூதத்தாழ்வார்,
பேயாழ்வார்
என அய்ந்து ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டத் தலம்.
முதல் ஆச்சரியம் கோவிலுக்கு முன்னே இருக்கும் குளமும், அதன் எதிரே இருந்த நந்தியும்.
கோவில் உள்ளே நுழைந்ததும் முதலில் எதிர்படுபவரும் நந்தி தேவன் தான். அழகிய வேலைப்பாடு. இப்போது திருப்பணி நடைபெற்று வருவதால் சிலைகள் வெள்ளைத்துணி போர்த்தி வைக்கப்பட்டுள்ளது.சிவன் சன்னதியும் மூடப்பட்டு இருக்கிறது.
நமக்குப் புரியாத கட்டிட அமைப்புடன் இருக்கிறது கோவில்.சிவன் சன்னதிக்கு பின்புறம் குறுகிச் செல்லும் பாதையில் நடந்து பெருமாள் கோவிலுக்கான படிகள் ஏறவேண்டியுள்ளது.
விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்),
முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்),
இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்),
மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்)
நின்ற , கிடந்த , அமர்ந்த வுடன் நடந்த (நர்த்தன கிருஷ்ணர்) கோலமும் கொண்டு காட்சி அளிக்கிறார் பெருமாள்.
ஸெளம்ய நாராயணரையும் , திருமாமகள் தாயாரையும் (நிலமாமகள், குலமாமகள் என இரண்டுமாய் இருக்கிறார்) சேவித்துக் காத்திருந்தால் அஷ்டாங்க விமானத்திற்குச் செல்ல அழைத்துச் செல்கிறார்கள். அஷ்ட்டாங்க விமானம் என்றால் என்ன என்பதற்கு எட்டு கொபுரத்திற்கு நடுவில் என ஒரு விளக்கம்? சொன்னார் கோவில் ஊழியர். எட்டு தளங்கள் இருக்குமோ என நான் நினைத்திருந்தேன் மூன்று தளங்கள் தான் இருக்கிறது . மதுரை கூடலழகர், உத்திர மேரூர் ஆகிய இடங்களில் மட்டுமே இப்படிப்பட்ட அஷ்ட்டாங்க விமானங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். உண்மையில் அஷ்ட்ட கோணலாய் உடம்பை வளைத்து, அங்கம் கஷ்ட்டப்பட்டு ஏற வேண்டிய விமானம் அது. ஒரு நபர் மட்டுமே ஏறமுடியும், ஆங்காங்கே குனிந்து தவழ்ந்து ஏறவேண்டியதிருக்கிறது.ஒவ்வொரு தளமாய் ஏறி நான்கு அடி உயரமுள்ள குறுகிய சந்தின் வழியே ஒரு பால்கனிபோன்ற இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு வந்த உடன் தான் மூச்சே வந்தது எனக்கு. அங்கிருந்து தான் ராமானுஜர் ஊர் மக்களை அழைத்து அஷ்ட்டாச்சர மந்திரத்தை மக்கள் அனைவருக்கும் உபதேசித்தாராம்.அங்கிருந்து பார்த்தால் ஆளவந்தாருடைய சிஷ்யரான திருக்கோட்டியூர் நம்பி யின் இல்லம் தெரிகிறது. “ அதோ தெரியுது பாருங்க சிவப்பு ஓடு போட்ட வீடு, மேலே கூட சிலைல்லாம் இருக்கே அதுதான் நம்பியின் வீடு” என்றார் ஊழியர். வீட்டின் எதிரே சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தனர்.அதன் அடையாளமாக நாங்கள் நின்ற இடத்தில் ராமானுஜரின் சிற்பம் இருக்கிறது. நாங்களும் “ ஓம் நமோ நாராயணா”ய என்று உள்ளுக்குள் உச்சரித்துக்கொண்டோம். நம்பி எம்பெருமானாருக்கு உபதேசித்தது என்ன? என்பதில் பெரியவர்களிடையே சில டிஸ்பியூட் இன்னும் இருக்கிறது. மணவாள மாமுனிகளுடைய முமூக்ஷுப்படி வ்யாக்யானத்தில் சரம ச்லோகத்தினுடைய அர்த்தத்தை தான் ராமானுஜர் வெளியிட்டார் எனவும், 6000 படி குருபரம்பரா ப்ரபாவத்தில், ராமானுஜர் திருமந்திரத்தினுடைய அர்த்தத்தைக் கற்றுக்கொண்டதாகவும், அதைத்தான் அவர் கோபுரத்தில் ஏறி அனைவருக்கும் அறிவித்தார் என்றும் இரண்டு விதமாகச் சொல்லப் படுகிறது. இரண்டாவது தான் லாஜிக்காக ஒத்துவருகிறது. சரமச்ஸ்லோகம் தரையில் உட்கார்ந்து சொல்லிக்கொடுத்தாலே ஏறாது, விமானத்தில் ஏறியெல்லாம் சொல்லி அது மக்களுக்கு விடக்கூடிய சங்கதி அல்ல அது. அனால் சொன்னவர் மாமுனிகள் என்பதால் நோ அப்ஜக்ஷன்.ஒருவழியாகக் மீண்டும் குனிந்து வளைந்து, தவழ்ந்து, கிடந்து, கீழே இறங்கி வந்தோம். திருக்கோட்டியூர் நம்பியின் இல்லத்தையும் பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று அந்த அக்ரஹாரத்திற்கு போனோம். அழகிய தெரு.எல்லா வீடுகளுக்கும் காவிப்பட்டையை பார்க்க முடிந்தது. நம்பியின் இல்லத்தின் ( சிலை இருக்கும் வீடு) முன்னே சிறிய திண்ணை இருக்கிறது. அமர்ந்து கொண்டேன் . நான் மணிசேஷன் வந்திருக்கிறேன் என்று சொல்லாமல் அடியேன் மணிசேஷன் வந்திருக்கிறேன் என்ற மனசுக்குள் சொல்லிக்கொண்டேன் 17 முறையெல்லாம் நம்மால் வரமுடியாது அல்லவா? அங்கிருந்து பார்த்தால் ராமானுஜர் அஷ்ட்டாங்க விமானத்தில் ஏறி மக்களிடம் சொன்ன இடம் தெரிகிறது. வீடு பூட்டியிருந்தது. வீட்டில் உள்ளவர்கள் பக்கத்தில் ஏதோ ஒரு விசேஷத்திற்காக சென்றுள்ளார்கள் என்று எதிர் வீட்டு திண்ணையில் இருந்த மாமி சொன்னார். பக்கத்திலேயே இன்னோரு வீடும் திருக்கோட்டியூர் நம்பி இல்லம் என்னும் போர்டுடன் இருந்தது. உண்மையில் எந்த வீடு ? என்று மாமியிடம் வம்பு கேட்டேன். “ சிலை இருக்கு பாருங்கோ அதுதான்” என்றார். ”அப்போ இது “ என்றேன். அது அவாளே போட்டுண்டது” என்று மாமியும் தாழ்ந்த குரலில் வம்பு பேசினார்.கொஞ்சநேரம் அந்த ஒரிஜனல் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வீதியில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த சிறுவர்களை பார்த்துக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினோம். ஓம் நமோ நாராயணா”ய.
( பொதுவாக அதிஷ்டானம், பாதவர்க்கம், கபோதவர்க்கம், க்ரீவா, சிகரம் ஸ்தூபி என்ற ஆறு அங்கங்களை உடையது விமானம். இதில் இருதளங்களிலும் கருவறையை அமைப்பதால் அஷ்டாங்கம். இதில் ஒன்பது மூர்த்திகளையும் அமைப்பதால் நவமூர்த்தி ஸ்தாபனம் தகவல் உபயம் : Sankara Narayanan G)

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே